முரசொலியை மூடுவோம்னு பொன்னார் சொல்றாரு.. பூட்டு போட விடுவோமா என்ன?- ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: முரசொலி அலுவலகத்தை மூடுவோம்னு பொன் ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அதை பூட்டு போட விடுவோமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன்- படம் மட்டுமல்ல.. பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து ஜாதிய சமூகத்தை சாடும் ஜாதி வன்மத்தை கேள்விக் கேட்கும் துணிச்சல்காரன் என பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்துக்காக கையகப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் ஒப்படைப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
அரசியலை விட்டு விலக தயார்
இதற்கு பதிலளித்த ஸ்டாலின் முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலமே இல்லை. வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான பட்டா மனை. பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார் என கூறியிருந்தார்.
பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
இந்த நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதால் அந்த அலுவலகத்தை மூடுவோம் என பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
சக்தி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில் என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன்.
வெற்றி கிட்டாது
எனக்கு கருணாநிதி போல் பேசுவதற்கோ எழுதுவதற்கோ தெரியாது. ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு என்னிடம் உள்ளது. வெற்றி சாதாரணமாக கிடைக்காது. அதை கிடைக்கவும் விடமாட்டார்கள். ஒற்றுமையின்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது.
பஞ்சமி நிலம்
மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால் அதை இன்னேரம் வெளியிடாமல் இருப்பார்களா. முரசொலியை மூடுவோம் என பொன் ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அதை பூட்டுப் போட விடுவோமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.