தரையில் அமரவைக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்... பொதுவாழ்வில் இருப்போருக்கு தலைகுனிவு.. ஸ்டாலின் வேதனை..!
சென்னை: சாதியை காரணம் காட்டி ஊராட்சித் தலைவர் தரையில் அமரவைக்கப்பட்ட நிகழ்வு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வுக்கு தமது கடும் கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தரையில் அமர வைக்கப்பட்டு... பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் அவமானம்.. சிந்துஜா கைது!!
தரையில் அமரவைப்பு
சிதம்பரம் அருகில் உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓர் ஊராட்சி மன்றத் தலைவர், தரையில் அமர்ந்திருக்கும் படம், பொதுவாழ்வில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு.
கீரிப்பட்டி
பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டு - 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தலே நடத்தப்படாமல் இருந்த மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊராட்சி மன்றங்களில் - 2006-ல் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் நடத்த உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நான் அமைச்சர்
நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, மேற்கண்ட உள்ளாட்சி மன்றங்களில் எல்லாம் தேர்தலை வெற்றிகரமாக நடத்தினோம். பட்டியலினத்தவர் வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவர்களாகவும் பதவியேற்க வைத்தோம். வெற்றிபெற்ற அந்த தலைவர்களை எல்லாம் சென்னைக்கு அழைத்து வந்து, கலைஞர் தலைமையில் பாராட்டு விழா நடத்தி - அரசு சார்பில் நிதி ஒதுக்கி - ஏன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மேற்கண்ட பஞ்சாயத்துகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தோம்.
அசோக் வர்தன் ஷெட்டி
நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் - பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு இதுமாதிரியான அவமரியாதைகள் நடக்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன். அதனடிப்படையில், எனது துறைச் செயலாளராக இருந்த திரு. அசோக் வரதன் ஷெட்டி அவர்கள் "பட்டியலினத்தவர் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கும் பஞ்சாயத்துக்களை அடையாளம் கண்டு - அங்கு இதுமாதிரி நிகழ்வுகள் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களை அறிவுறுத்தினார்.
அதிமுக அரசு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவருக்கு தெற்குத்திட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வு, சமூகநீதி போற்றும் தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம். ஆகவே இனி எந்த ஊராட்சியிலும் இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது; அ.தி.மு.க. அரசு அதனை அணுவளவும் அனுமதிக்கவும் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.