முதலமைச்சருக்கு கூழுக்கும் ஆசை ; மீசைக்கும் ஆசை... கிராம சபை கூட்டம் ரத்துக்கு ஸ்டாலின் கண்டனம்..!
சென்னை: கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை திட்டமிட்டபடி திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள் என அவர் உறுதிப்படக் கூறியிருக்கிறார்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து... தமிழக அரசு திடீர் அறிவிப்பு..!
அதிமுக ஆட்சியில்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நாளையதினம் நடைபெற விருந்த கிராமசபைக் கூட்டங்களை அடிப்படையின்றி ரத்து செய்திருப்பதற்கு, அ.தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்- மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலரும்- ஏன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் அ.தி.முக.வின் "மாவட்டச் செயலாளர்கள்" போல் செயல்படுகிறார்கள்.
கழுத்தறுப்புக் கதை
நேற்றைய தினம் தமிழக அரசு வெளியிட்டுள்ள "கொரோனா செய்திக்குறிப்பில்" , ஈரோடு மாவட்டம் நோய் பாதிப்பில் 26 - ஆவது இடத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அறிவித்துவிட்டு, இன்று கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்வதற்காக- "நோய்ப் பரவல்" என்று மாவட்ட ஆட்சித் தலைவர் காலையில் ‘அம்புலிமாமா கதை' விட்டார். இப்போது முதலமைச்சரே அந்த கழுத்தறுப்புக் கதைக்கு வெட்கத்தை உதறிவிட்டு எழுத்தாளர் ஆகியிருக்கிறார்.
ஆதரவு பெருகியது
மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும்- அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும், நாட்டில் எழுந்துள்ள எதிர்வினை அலைகளை ஒட்டி, நான் நேற்றைய தினம் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் மத்தியிலேயே , அமோக ஆதரவு திரண்டு வருவதைத் தெரிந்து கொண்டுள்ள அ.தி.மு.க. அரசு, "சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும்" என்றுதான் இந்த "மிரட்டல்" முயற்சிகளில் எல்லாம் இறங்கியது.
கூட்டம் ரத்து
தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று, எங்கே அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்களும் - கட்சி சார்பற்ற முறையில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று திரு. பழனிசாமிக்கு கிடைத்த கடைசித் தகவல் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆகவேதான் கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் திரு பழனிசாமியே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
உச்சாணிக் கொம்பு
என்ன செய்வது!? - உள்கட்சிப் பிரச்சினைகளின் உச்சாணிக் கொம்பில் இருந்து எங்கே விழுந்து விடுவோமோ என்ற சோகத்தில் இருக்கும் முதலமைச்சர்- "கொரோனா"விலும் பெரிதும் குழம்பிப் போய் நிற்கிறார் பாவம்! மாவட்டம் மாவட்டமாக சென்று "ஆய்வுக்கூட்டம்" என்ற பெயரில் "முதலமைச்சர் வேட்பாளருக்காக" நாணமின்றி ஆதரவு திரட்டி - உள்கட்சிப் பிரச்சினையில், மீள முடியாமல் ஆழமாகச் சிக்கியுள்ளார் முதலமைச்சர் திரு. பழனிசாமி. அ.தி.மு.க. என்றால் கொரோனாவே இல்லை; தி.மு.க. ஒரு ஜனநாயகாக் கடமையாற்ற வந்தால் கொரோனா வந்து விடுகிறதா?
மீசைக்கும் ஆசை
முதலமைச்சருக்கு நேர்மையும் நெஞ்சுரமும் இருந்தால், அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்களை விட்டு வேளாண் சட்டங்களை ஆதரித்து தீர்மானம் போடுங்கள் என்று அறைகூவல் விடுத்திருக்க வேண்டியதுதானே! அது அவரால் முடியாது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற பேராசையான நிலைமை. " நம் பதவியைக் காப்பாற்ற விவசாயிகள் விரோதச் சட்டங்களை ஆதரித்து விட்டோம். ஆனால் மக்களிடம் வாக்கு பெற்று - வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள்- குறிப்பாக அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களே, தமது மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்கள்" என்பது திரு. பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும்.
திமுக தலைவர்கள்
ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக - திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த பணியை, நிச்சயம் செய்து முடிக்கும். ஆகவே ஏற்கனவே திட்டமிட்டபடி - கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் - கழக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும், கிராம மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.