தமிழகத்தின் தற்போதைய சூழல் அறிந்து நிதி ஒதுக்குங்கள்... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை : தமிழகத்தின் தற்போதைய சூழல் அறிந்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கஜா புயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் டெல்டாவாசிகள் வெளிவராத நிலையில், சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தன்னார்வலர்கள் பலர் நேரில் சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
குடிநீர், மின்சாரம், போதிய உணவு இன்றி பலர் தவித்து வரும் நிலையில் மத்தியக் குழு இன்று இரண்டாவது நாளாக புயலால் பாதித்த தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து சீரமைப்பு பணிகளுக்க ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதியை ஒதுக்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது : ஆய்வை, முறையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும். தற்போதைய சூழலை அறிந்து தமிழகம் கேட்கும் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றார். இதுவரை தமிழகம் கோரிய நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்கியதில்லை. தற்போதைய சூழல் அறிந்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி குறைவு தான். இதனை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற வேண்டும் என்றும் கூறினார்.