ஸ்டாலின் நேரில் ஆஜராகத் தேவையில்லை.. விலக்கு அளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்காக நேரில் வருவதற்கு விலக்கு கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் செப்டம்பர் 20ம் தேதி இந்த சிறப்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். சிறப்பு நீதிமன்றத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திமுக தலைவர் ஸ்டாலின் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு முதல் நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்பு ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அடுத்தடுத்த வழக்குகளில் ஸ்டாலின் ஆஜராக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவதூறு வழக்கின் விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
2011- 2016 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரைப் பற்றி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக 3 வழக்குகள் தொடரப்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் "அதிமுக ஆட்சியின் சார்பில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், அவரது மறைவிற்குப் பிறகு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் 7 அவதூறு வழக்குகளை என் மீது போட்டுள்ளனர். தடா, பொடா, மிசா வழக்குகளை சந்தித்த எங்களுக்கு அவதூறு வழக்குகளை கண்டு பயமில்லை, தமிழக அரசின் அவதூறு வழக்குகளை எந்த சூழ்நிலையிலும் சந்திக்க தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.