அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்.. அமைச்சர் ஜெயக்குமார் சுளீர் கருத்து
சென்னை:அதிமுக, பாமக, பாஜக இடையே கூட்டணி அமைந்ததால் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், அதிமுகவானது சுறுசுறுப்பை காட்டி வருகிறது. பாமக, பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொகுதிகள் அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். இது குறித்து பேசிய ஸ்டாலின், அதிமுகவை விமர்சித்து புத்தகமே வெளியிட்டுள்ள பாமக, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார்.
ஆனால் இன்றைக்கு மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் என்று ஸ்டாலின் பேசினார். அதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:அதிமுக. பாமக, பாஜக இடையே கூட்டணி அமைந்ததில் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். அதிமுகவில் மெகா கூட்டணி அமைந்து விட்டது என்ற ஆதங்கம் ஸ்டாலின் பேச்சில் தெரிகிறது.
அதிமுக கூட்டணி பற்றி ஸ்டாலின் சொல்வது மக்களிடம் எடுபடாது. அதிமுக கூட்டணி இயற்கையாக அமைந்தது. இது மக்கள் நலனுக்கான கூட்டணி என்று அவர் கூறினார்.