திமுக தலைவர் பேசுவது முற்றிலும் பொய்... தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்... முதல்வர் தாக்கு
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய்யாகவே பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், குளித்தலை பகுதியில் இன்று பிரச்சாரத்தை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். குளித்தலை சட்டமன்ற தொகுதி வேளாண் பெருமக்கள் தொழிலாளிகள் நிறைந்த பகுதி விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் நன்றாகத் தெரியும்" என்றார்.
பேசுவது பொய்
திமுக தலைவர் ஸ்டாலினை தாக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஸ்டாலின் பொய்யாகவே பேசி வருகிறார். அவருக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும். திமுக குடும்ப கட்சி கார்ப்ரேட் கம்பெனி. அதன் சேர்மன் ஸ்டாலின் திமுகவிற்காகப் பாடுபட்டவர்கள் பலர் இருந்தும், அவர்களைப் பிரச்சாரத்திற்கு அனுப்புவதில்லை. உதயநிதிக்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம்? அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதலமைச்சரே ஆகலாம். ஆனால் திமுகவில் வர முடியாது.
2019இல் பெறப்பட்ட மனுக்கள்
திமுக தலைவர் தற்போது பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களைப் பெட்டியில் போட்டு, பூட்டி வீட்டில் வைத்துவிட்டு 3 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராகி திறப்பேன் என்று கூறுகிறார். இப்படிப்பட்ட தலைவரை எங்கேயாவது பார்த்துண்டா? 2019இல் ஊர் ஊராகச் சுற்றி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டதா? அந்த மனுக்கள் என்ன ஆயிற்று?" என்றும் அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
இரண்டு முறை விவசாயிகளின் கடன் தள்ளுபடி
தொடர்ந்து பேசிய அவர், "அப்போது வாங்கிய மனுக்கள் போலவே இப்போது வாங்கி வரும் மனுக்களும் இருக்கும். ஆனால், அதிமுக அப்படிச் செய்யாது. எதைச் சொல்கிறோமோ, அதைச் செய்கின்ற கட்சி. 2006இல் திமுக தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் தருவதாகக் கூறினார்கள். ஆனால் தரவில்லை. நிலத்தைக் கொடுக்காவிட்டால் பரவாயில்லை, பிடுங்காமலிருந்தாலே போதும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம் அதிமுக. இந்த ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்குப் பணம்
பொங்கலுக்கு அதிமுக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 100 ரூபாய்கூட கொடுக்கவில்லை. அப்படிப்பட்டவர் எப்படி ஏழை மக்களைக் காப்பாற்றுவார். ஒட்டு மொத்த உழைக்கும் மக்களைக் காக்கும் கட்சி அதிமுக. நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகின்றது. தண்ணீரை முறையாகச் சேமித்து விவசாயிகளுக்கு வழங்கக் குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு, அதைச் செயல்படுத்திய அரசு அதிமுக தான்" என்றும் அவர் பேசினார்.