கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் சந்திப்பு... காணொலியை தவிர்த்து நேரில் அழைத்த பின்னணி..!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டல நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 6 மாதங்களாக காணொலி மூலம் நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வந்த ஸ்டாலின், முதல்முறையாக அவர்களை சென்னைக்கு நேரில் அழைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
கொங்கு மண்டலத்தை தொடர்ந்து தென் மண்டலம், வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம் என நான்கு மண்டல நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து இந்தச் சந்திப்புகளின் போது ஸ்டாலின் பேசுவார் எனத் தெரிகிறது.
மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை கொரோனாவுக்கு முன் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஓடிக்கொண்டே இருந்தவர். சலிக்காமல் ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை நேரில் சந்தித்து தாமும் உற்சாகம் அடைவதோடு கட்சி நிர்வாகிகளையும் உற்சாகம் கொள்ளச்செய்வார்.
இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு அவர் வெளிமாவட்டங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். அவரது பிரதிநிதியாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் வெளியூர்களுக்கு சென்று வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான் மண்டல வாரியான நிர்வாகிகள் சந்திப்புகளை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
நிர்வாகிகள் ஸ்டாலினை சந்திக்காமல் இருப்பது அவர்களுக்கு தொய்வை தந்துள்ளதாக வந்த தகவலை அடுத்து, காணொலி மூலம் நடைபெற இருந்த கூட்டத்தை மாற்றியமைத்திருக்கிறார். ஒருவரை ஒருவர் நேரில் முகம் பார்த்து பேசுவதற்கும் கம்ப்யூட்டர் மூலம் சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 26 சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களிடம் கூட்டணி விவகாரம், தேர்தல் பணி, எந்தெந்த தொகுதிகளை கூட்டணிக்கு கொடுக்கலாம் என்பன பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.