ராகுலே கை கழுவிட்டார்.. ஸ்டாலின் மட்டும் சும்மாவா இருப்பார்.. திகிலடிக்கும் அறிவாலய பிளான்கள்!
Recommended Video
சென்னை: ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியை கை கழுவி விட்ட நிலையில், அக்கட்சியை தூக்கிப் பிடிக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை என்று அக்கட்சியினர் கூற ஆரம்பித்துள்ளனர். இதனால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
ஸ்டாலினை நாமெல்லாம் தி.மு.க.வின் தலைவர், தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர்! என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க, அவரோ தன்னை அகில இந்திய அளவில் ப்ரமோட் செய்து கொண்டிருக்கிறார். பாசிடீவ் சேனலில் போனால் அவ்வளவு எளிதாக அகில இந்திய அரசியலின் கவனத்தை ஈர்க்க முடியாது! என முடிவெடுத்தவர், சர்ச்சை ரூட்டில் டாப் கியரை போட்டு வண்டியை சல்ல்ல்ல்லென விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் காங்கிரஸுடனான நட்பு முறிந்தாலும் கவலை இல்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டார்.
அதில் ஒன்றுதான் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தின விழாவுக்கு பல தடைகளையும் மீறி மம்தாவை அழைத்தது. இந்த விழாவுக்கு மம்தாவை அழைத்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மாஜி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சொன்னார்களாம். ஆனாலும் அதையெல்லாம் தூக்கி அக்கட வீசிவிட்டு மம்தாவை அழைத்து பெரும் பெருமைபடுத்தினார் ஸ்டாலின்.
டென்ஷனில் காங்கிரஸ்
இதனால் தி.மு.க.வின் முக்கிய கூட்டணி நண்பனான காங்கிரஸுக்கு செம்ம டென்ஷன். ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதை எதிர்த்த மம்தாவை ஸ்டாலின் அழைப்பதா? என்று டெல்லி காங்கிரஸ் எகிறி குதித்தது. ஆனாலும் ஒரு பலனுமில்லை. இருப்பினும் கூட்டணியில் இருக்கும் பாவத்துக்காக முரசொலி அலுவலக நிகழ்வில் மட்டும் கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா போன்றோர் தலையை காட்டினர்.
மமதாவின் மனம் குளிர
தி.மு.க. விழாவுக்காக தமிழகம் வந்த மம்தாவை குளிரக் குளிர பெருமைபடுத்திவிட்டது தி.மு.க. தரப்பு. எல்லா வகையிலும் அவரை உயர்த்திக் கொண்டாடிவிட்டனர். ‘தைரியமான பெண்' எனும் வகையில் இது நாள் வரையில் தெற்கு அரசியலில் ஜெயலலிதாவை மட்டுமே மம்தா விரும்பிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ சகோதரர் ஸ்டாலினின் அப்ரோச் அவரை நெகிழ வைத்துவிட்டது.
வருங்கால சிஎம் ஸ்டாலின்
பி.ஜே.பி.க்கு எதிராக மேற்கு வங்கத்தில் தானும், தமிழகத்தில் ஸ்டாலினும் போர் தொடுத்து நிற்பதை பெருமையாக குறிப்பிட்டார். விழாக்களின் மேடைக்கு ஏறும் முன்பாக ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் அன் அபீஸியலாக பேசிக் கொண்டிருந்த மம்தா, ஸ்டாலினுக்கு திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக கொடுக்கையில் ‘வருங்கால சி.எம். ஸ்டாலின்' என சொல்லி கொடுத்திருக்கிறார். இதில் நெக்குருகிவிட்டார் ஸ்டாலின்.
கவலை இல்லை
ஆக காங்கிரஸின் கோபம், கடும் அதிருப்தி என எல்லாவற்றையும் மீறி மம்தாவுடன் ஸ்டாலின் கைகோர்ப்பதை தமிழக அரசியலரங்கம் அதிர்ச்சியுடன் பார்க்கிறது. ஆனால் தி.மு.க. தரப்போ.."உண்மைதான். எங்கள் தலைவர் இப்போது மம்தாவுக்கு முமுமையான அரசியல் ஆதரவை தர துவங்கிவிட்டார். என்ன பண்ண அரசியல் சூழல் அப்படி. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பி.ஜே.பி.க்கு எதிராக நாயுடு திரட்டிய மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை பிரதமர் வேட்பாளர்! என முன்மொழிந்தது ஸ்டாலின் தான். இதற்காக மம்தா, மாயாவதி, அகிலேஷ் ஆகியோரின் திட்டுக்களையும் வாங்கிக் கட்டினார். அந்த தேர்தலின் கடைசி நொடி வரை ராகுலை தலையில் வைத்துக் கொண்டாடினார் ஸ்டாலின்.
காங். வெல்ல ஸ்டாலினே காரணம்
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்த காங்கிரஸ் தான் போட்டியிட்டதில் 95% இடங்களை வெல்ல ஸ்டாலினின் உழைப்புதான் முக்கால்வாசி காரணம். இது காங்கிரஸின் மனசாட்சிக்கு தெரியும். ஆனால் தேசிய அளவில் அரசியல் சூழல் வேறு மாதிரி ஆகிவிட்டது. காங்கிரஸ் பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. எனவே பி.ஜே.பி.க்கு எதிரான விஷயங்களை முன்னெடுக்க எங்கள் தளபதிக்கு வட இந்தியாவிலும் வலிமையான கைகள் தேவைப்படுகின்றன. இன்று இவ்வளவு வலிமையான பி.ஜே.பி.யின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவது தமிழகம்தான். அதை சாதிப்பவர் ஸ்டாலின் தான். அவருக்கு அகில இந்திய அளவில் இந்த விஷயத்தில் ஒரு வலுவான தலைவரின் நட்பு தேவை. அதைத்தான் செய்ய துவங்கியுள்ளார்.
ஸ்டாலினால் என்ன பண்ண முடியும்
மம்தா - ஸ்டாலின் இருவரின் அரசியல் கூட்டணி நிலைக்கும், நீடிக்கும், பி.ஜே.பி.யின் மதவாத அரசியலை இருவரும் மிக உக்கிரமாக எதிர்ப்பார்கள். இவ்வளவு ஏன், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மம்தாவை பிரதமர் வேட்பாளராக முன்மொழியவும் ஸ்டாலின் தயங்க மாட்டார்." என்கிறார்கள். அப்படின்னா ராகுலை கைகழுவிட்டாரா ஸ்டாலின்? என்று கேட்டால். தலைவர் பதவி வேண்டாம்னு சொல்லி காங்கிரஸை ராகுலே கை கழுவிட்ட பிறகு தளபதியால் வேறென்ன பண்ண முடியும்? என்கிறார்கள்.
அதுவும் சர்தான்!
- ஜி.தாமிரா