ஆன்லைன் ஸ்டாலின் vs ஆப்லைன் எடப்பாடி.. அரசியல் சதுரங்க வேட்டை.. விறுவிறுப்பு
சென்னை: கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இணைவழி தேர்தல் பிரச்சாரம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆன்லைன் அரசியலில் விறுவிறுப்பாக இறங்கி உள்ளார். அதே சமயம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டு ஆப்லைன் அரசியலை கையில் எடுத்துள்ளார்..
அரசியலில் வெற்றி தோல்வி என்பது இரண்டாவது. இருப்பை எந்த நேரமும் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் தனக்கு எதிர்தரப்பை அரசியல் ரீதியாக நிலைகுலைய வைப்பதே அரசியல் கட்சிகளின் செயல்பாடாக உள்ளன.
அந்த வகையில் இதுவரை ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக கடுமையாக மோதி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் என்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாக தொடங்கிவிட்டன.
ரூ 10 கோடி அபராதம் தானே.. அதெல்லாம் ஒரு மணி நேரத்தில் கட்டிடலாம்.. சசிகலா வழக்கறிஞர்
சமூக ஊடகங்களில்
கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் இந்த முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்கிற முனைப்பில் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. சமூக ஊடகங்களில் மத்திய அரசின் திட்டங்களை அதிமுக கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறது. உதாரணமாக வேளாண் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக ஆதரிப்பதை விமர்சித்து திமுக கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது.
கடும் விமர்சனம்
ஊரடங்கு காரணமாக பொதுக்கூட்டம் போட்டு மக்களை நேரில் சந்திக்க முடியாத காரணத்தால் இணையவழியில் உறுப்பினர்கள் சேர்க்கையில் திமுக தீவிரமாக இறங்கி உள்ளது. ஒன்றினைவோம் வா, திமுகவில் இணையவழியில் உறுப்பினராகுங்கள் என்று களம் இறங்கி வேலை செய்து வருகிறது.திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சித்து அறிக்கைகள், கட்டுரைகள், கேள்விகள் என சமூக வலைதளங்களில் வேகம் காட்டி வருகிறார்.
மாவட்டந்தோறும்
இதனிடையே ஸ்டாலின் ஆன்லைன் என்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆப்லைனில் தீவிரமாக இறங்கி உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள், அறிக்கைகளுக்கு ஒவ்வொரு நாளும் பதிலடியும் கொடுத்துவருகிறார். அத்துடன் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்தி நிறைவேற்றி வருகிறார். அத்துடன் மாவட்டம் தோறும் அரசின் சாதனைகளை செயல்பாடுகளை பட்டியலிட்டு, இதை செய்திருக்கிறோம். அதை செய்திருக்கிறோம் பாருங்கள் என்று மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார்.
இருவரும் சளைப்பதில்லை
ஸ்டாலின், எடப்பாடி இருவருமே ஊடகங்களை சந்திப்பதிலோ, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதிலோ சளைப்பதில்லை. திமுக சமூக வலைதளங்களில் மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு எடப்பாடி ஊடகங்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். இதேபோல் முதல்வர் எடப்பாடியின் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்டாலின் பதிலடிகொடுத்து வருகிறார். தமிழக அரசியல் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்று இரண்டு மட்டத்திலும் விறுவிறுப்பாக உள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னரே இரு கட்சிகளும் மக்களை சந்திக்க முடியும் என்பதால் அதுவரை இப்படித்தான் தொடரும்.