100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..!
சென்னை: திமுக அரசு அமைந்தவுடன் முதல் 100 நாட்களுக்குள் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
'உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு' என்ற புதிய உறுதியையும் அவர் இன்று கொடுத்துள்ளார்.
மேலும், திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் கோரிக்கை மனுக்களை பரிசீலிப்பதற்காகவே தனித்துறை உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
கோபாலபுரம் இல்லம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு வழங்க தனி கவனம் செலுத்தி திமுக அரசு அமைந்த முதல் 100 நாட்களுக்குள் குறைகள் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
அலைபேசி எண்
இதன் மூலம் குறைந்தது ஒரு கோடி குடும்பங்களாவது பயன் பெறக்கூடும் என தாம் நம்புவதாக அறிவித்தார். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 91710 91710 என்ற அலைபேசி எண் வாயிலாகவும் stalin ani என்ற செயலி மற்றும் இணையதளப் பக்கம் மூலமும் மக்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் தெரியப்படுத்தலாம் எனக் கூறினார்.
மனு பெட்டி
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் தன்னிடம் மக்கள் தங்கள் மனுக்களை வழங்கலாம் என்றும் அந்த மனுக்களுக்கு அத்தாட்சி கடிதம் தரப்பட்டு தனது நேரடி கண்பார்வையின் கீழ் சீல் வைக்கப்பட்டு மனுக்கள் உள்ள பெட்டிகள் மாவட்டங்களில் இருந்து சென்னை கொண்டுவரப்படும் எனக் கூறினார்.
ஸ்டாலின் உறுதி
இதனிடையே இது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஐடியா இல்லாம நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்றும் ஐடியாவோடு தான் செய்வோம் எனவும் கூறினார். மேலும், சொல்வதை தான் செய்வோம்; செய்வதை தான் சொல்வோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.