கபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..!
சென்னை: பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் விநியோகத்தை சென்னையில் தொடங்கி வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு 5 நாட்கள் மட்டும் கொடைக்கானலுக்கு சென்று குடும்பத்தினருடன் ஓய்வெடுத்த ஸ்டாலின், எப்போதும் போல் தனது களப்பணியை மீண்டும் தொடர தொடங்கியிருக்கிறார்.
தேர்தால் தான் முடிந்துவிட்டதே, இனி மேல் எதற்கு செல்ல வேண்டும் எனக் கருதாமல் பேரிடர் காலத்திலும் ஸ்டாலின் களத்திற்கு வந்திருப்பது திமுக நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
2018 போல மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடக்க விரும்பவில்லை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
பிரச்சார பயணம்
சட்டமன்றத் தேர்தல் திருவிழா கடந்த 6-ம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதன் முடிவுக்காக தமிழகம் காத்திருக்கிறது. இதனிடையே உங்கள் தொகுதியில் ஸ்டாலின், ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற பிரச்சார செயல்திட்டங்களின் கீழ், கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் சுற்றிவந்து பொதுமக்களை சந்தித்தார் ஸ்டாலின்.
கொடைக்கானல்
அதுவும் குறிப்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்பதற்காக பத்தாயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணித்தார். இப்படி பயணித்த அவர், தேர்தலுக்கு பிறகு ஓய்வெடுத்தது வெறும் 5 நாட்கள் மட்டுமே. அதுவும் குடும்பத்தினர் மற்றும் பேரக்குழந்தைகள் வலியுறுத்தல் காரணமாக கொடைக்கானலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
கபசுரக் குடிநீர்
அங்கிருந்தவாறே பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் திமுகவினர் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதனையேற்று ஒரு சில நிர்வாகிகள் இந்தப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினாலும் பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருந்தது. அதற்கு காரணம் கொரொனா 2-வது அலையின் வேகம் அந்த மாதிரி இருப்பதே.
நேரில் விநியோகம்
இந்நிலையில் இன்று களத்திற்கு வந்த ஸ்டாலின், சென்னை எழும்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் தொகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர், முககவசம், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள சானிடைஸர் உள்ளிட்டவைகளை நேரில் கொடுத்தார். ஸ்டாலினே நேரடியாக களத்தில் இறங்கியிருப்பதால் இனி திமுகவின் மற்ற நிர்வாகிகளும் கபசுரக் குடிநீர் விநியோகிக்க முழுமையாக களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.