எல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த திமுகவிற்கு இ.யூ.முஸ்லிம் லீக்
தேசிய தலைவர் காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட எங்கள் கூட்டணி தமிழகத்தில் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளோம். இதற்காக ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொண்டோம். இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வென்றுள்ள நவாஸ்கனிக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.
மத்தியில் நல்லாட்சி வேண்டும் என்று தான் தமிழக மக்கள் வாக்களித்தனர். தமிழகத்தில் கலைஞர் இல்லையே என்கிற கவலை இருந்தது. கலைஞர் எப்படி செயல்படுவாரோ ஒருபடி மேலே சென்று மு.க. ஸ்டாலின் பிரச்சார வியூகங்களை அமைத்து சுறுசுறுப்பாக உழைத்தார். அவருடைய உழைப்பாலும், பிரச்சாரத்தாலும்தான் இந்த மாபெரும் வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது என பாராட்டினார்.
மோடியின் வெற்றியால் பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்தும் நம் கலாச்சாரம்.. ஆனந்த் மஹிந்த்ரா பெருமித ட்விட்
ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து பாடுபட்டதை போல, ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டாலினைபோன்ற ஒருவரை தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்திருந்தால் மோடி ஆட்சி வந்திருக்காது. இதையும் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தோம் என்றார்.
இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திருவாரூர் தொகுதியை தவிர 12 தொகுதிகள் அதிமுகவிடமிருந்து திமுக பெற்றிருக்கிறது. அந்த கட்சிக்கு முன்பு வாக்களித்த மக்கள் நம்பிக்கை இழந்து திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் வகுக்கப்பட்ட கொள்கை, கோட்பாடுகளை இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும். தமிழகத்திலுள்ள திராவிட பாரம்பரியம் போல் அமைய வேண்டும் என பேசினாா்