நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிளுக்கான இடைத்தேர்தல் களத்தில், திமுக அணியின் பணி இனிமையாக அமைந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தைப் பாதுகாத்து, எதிர்காலத்திற்கு ஏந்திச்செல்லும் போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்திடவும், அடிமைக் கூட்டத்தை அறவே அகற்றிடவும் தி.மு.க. வின் தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் அயராமல் அரும்பாடு பட்டதற்கு உரிய பலனை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார்.
திமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகள், போட்டியிட வாய்ப்பு அமையாத சூழல் ஏற்பட்ட போதும் திமுகவின் வெற்றிக்காக செயலாற்றிய கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இதயமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
அயராத உழைப்பிற்கும், மக்கள் தந்த ஆதரவிற்கும் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை திடமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், "மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்" என்று கூறியுள்ளார்.
திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்
எனினும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் திமுக தொண்டர்களும் ,கூட்டணி கட்சியினரும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தவர்களுக்கும், மே19-ல் வாக்குப்பதிவு நடக்க உள்ள நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைத்து கொண்டிருப்போருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் உழைப்பின் வியர்வை, மக்களின் வாக்குகளாக மாறி, உறுதியாகட்டும் வெற்றி என கூறியுள்ளார்.