கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன்... விவசாய கடன் தள்ளுபடி... மு.க.ஸ்டாலின் உறுதி..!..!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா மற்றும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார்.
நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன்களால் விழிபிதுங்கி நின்ற விவசாயிகளுக்கு ஸ்டாலினின் இந்த தள்ளுபடி அறிவிப்பு சற்று நிம்மதியை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச பேச்சு உட்பட 4 பிரிவுகளில்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்த வழக்கு.. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி
விவசாய கடன்
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியான, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடனும் திமுக ஆட்சி அமைந்தவுடன் தள்ளுபடி செய்யபடும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இன்னும் 4 மாதங்களில் விவசாயிகளின் துயர் துடைக்கப்படும் என்ற உறுதிமொழியை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.
நிம்மதி
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி, வேளாண் கடன் தள்ளுபடி என்ற ஸ்டாலினின் உறுதிமொழி விவசாய பெருங்குடி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், நிம்மதியை அளித்துள்ளது. ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்ட போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பி தங்கள் வரவேற்பை பதிவு செய்தனர்.
இலவச மின்சாரம்
மேலும், விவசாயிகள் நலனுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்த ஆட்சி திமுக என்றும், இதற்கு முந்தைய திமுக ஆட்சிக்காலங்களில் தான் 7,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது எனவும் கூட்டத்தில் ஸ்டாலின் நினைவூட்டினார்.
பச்சைத்துண்டு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு தன்னை விவசாயி என்று கூறிக்கொள்கிறாரே தவிர இதுவரை விவசாயிகளுக்காக அவர் எதையும் செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.