சென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்
சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு காட்டிய அலட்சியத்தால், ஒரு நாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், தமிழக அரசு அலட்சியத்துடன் நடந்துகொண்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சட்டசபை தேர்தல் வியூகம்.. நேரில் வந்த 8 மாவட்ட நிர்வாகிகள்.. ஸ்டாலின் எழுப்பிய பரபர கேள்விகள்
வெள்ளக்காடு
இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு "டிசம்பர் 2015" வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
அரசின் தோல்வி
மழை நீர் வடிகால்வாய்களை முறைப்படி முன்கூட்டியே தூர் வாரி, சீரமைத்து- வேண்டிய இடங்களில் அகலப்படுத்தி, இந்தப் பருவ மழையைச் சந்திக்கச் சென்னை மாநகராட்சி தயாராகியிருக்க வேண்டும். சென்னையில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தது. ஏற்கனவே 2015 டிசம்பர் வெள்ளத்தில் அ.தி.மு.க. அரசின் தோல்வியால் மக்கள் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது.
கடும் கண்டனம்
சென்னை மாநகருக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால்- இப்போது குறைந்தபட்சம், கவுன்சிலர்களாவது மக்களோடு துணைநின்று, குறைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்கான வாய்ப்பையும் கெடுத்து விட்டு அமர்ந்திருக்கும் எடப்பாடி அரசு - அதிகாரிகளையும் ஊழலில் ஈடுபட வைக்கும் பயிற்சியை மட்டும் நன்கு அளித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
2015 டிசம்பர் வெள்ளம்
எடப்பாடி அரசால் முடியவில்லை என்றால்- தயவு செய்து பேரிடர் மீட்புப் படையை அழைத்து- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்து, சென்னை மாநகரைக் காப்பாற்றப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க. அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் விரிவான முறையில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.