நாளை மரக்காணத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன்... ஸ்டாலின் கடிதம்..!
சென்னை: திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட மரக்காணத்தில் நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தாம் பங்கேற்க உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சட்டப்பேரவைத் தேர்தல்
கிராமசபைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியெங்கும் மக்களின் சிறப்பான, எழுச்சி மிகு வரவேற்பு. அது தனிப்பட்ட முறையில் எனக்கானது என்று நான் எண்ணவில்லை. தமிழக மக்கள் மிகத் தெளிவான முடிவுடன், ஆட்சி மாற்றத்தை உருவாக்கிடத் தயாராக இருக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில், அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய இயக்கம், தி.மு.கழகம்தான் என்பதில் திடமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்.
புரட்டுத் திட்டங்கள்
பொய் வாக்குறுதிகள் - புரட்டுத் திட்டங்கள் - பெட்டி பெட்டியாய்க் கொள்ளை என, ஏறத்தாழ பத்தாண்டுகளாகத் தமிழகத்தை, தொடர்ந்து இருளில் தள்ளியவர்களை, தேர்தலின் மூலம் வெளியே தூக்கி எறிய வேண்டும் என்பதே, குண்ணம் முதல் குமரிவரை தமிழகத்தின் அனைத்துப் பகுதியில் உள்ள மக்களின் ஒரே தீர்மானமான எண்ணமாக இருக்கிறது. அதன் அர்த்தம் நிறைந்த வெளிப்பாடுதான், உங்களில் ஒருவனான எனக்கு அவர்கள் தந்த வாஞ்சைமிகு வரவேற்பு.
தொலைபேசியில் பேச்சு
கழகத்தின் தலைமை நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரிடமும் அலைபேசி வழியாகப் பேசி, கிராம/வார்டு சபைக் கூட்டங்கள் எப்படி நடந்தன என்பதை விசாரித்தறிந்தேன். அத்தனை பேரும், மக்கள் அளித்த பேராதரவை மகிழ்ச்சி பொங்கச் சுட்டிக்காட்டினர். ஆட்சி மாற்றத்துக்குக் கழகத்தினரையும் மிஞ்சும் வகையில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகம் இருப்பதைக் கூறினர்.
நான் பங்கேற்கிறேன்
16ஆயிரம் ஊராட்சிகளுக்கான கிராம/வார்டு சபைக் கூட்டங்களில் முதல்நாளான டிசம்பர் 23 அன்று மட்டும், 1166 கூட்டங்கள் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றுள்ளன.நாளை இதேபோல திண்டிவனம் தொகுதி மரக்காணம் பேரூராட்சியில் நடைபெறும் வார்டுசபைக் கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன்.
ஸ்டாலின் கடிதம்
16ஆயிரம் ஊராட்சிகள் - வார்டுகளிலும் கிராம/வார்டுசபைக் கூட்டங்களை முழுமையாக நடத்தி, மக்களின் குறைகளைக் கேட்டிட வேண்டும்.
அ.தி.மு.க.வை நிராகரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அவர்களிடம் துண்டறிக்கைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரமாகவும் எடுத்துரைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக நானும், மக்களோடு இணைந்து நாமும் தொடர்ச்சியாகப் பயணிப்போம்.