திமுக தேர்தல் அறிக்கை எப்படியிருக்கும்.. செய்தியாளர்கள் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த கலகலப்பான பதில்!
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை நிச்சயமாக கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் இருக்கும். அதே சமயத்தில் வில்லனாக இருக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவிப்பதற்காக அதை எடுத்துக் கொண்டு சென்னை மெரினாவுக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சமாதியில் வைத்து ஆசி பெற்றார்.
ஆசி
அதன்பின்னர் நேராக அண்ணா சமாதியில் வைத்தும் ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வீட்டுக்கு சென்று அங்கு அவரிடம் வேட்பாளர் பட்டியலை காண்பித்து ஆசி பெற்றார்.
வேட்பாளர்கள் பட்டியல்
இதையடுத்து அண்ணா அறிவாயலத்துக்கு வந்த ஸ்டாலின் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவரிடம் திமுக தேர்தல் அறிக்கை எப்படியிருக்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நிச்சயம்
அப்போது அவர் கூறுகையில் திமுக தேர்தல் அறிக்கை வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படும். வழக்கம் போல் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருக்கும். நிச்சயம் வில்லனாக இருக்காது.
வெற்றி
வரும் 20-ஆம் தேதி முதல் திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். கருணாநிதியே வேட்பாளராக நிற்பதாக கருதி அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
வேட்பாளர் பட்டியல்
40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அனைவரிடமும் கலந்து பேசி எடுக்கப்பட்ட இறுதி முடிவுதான் இந்த திமுக வேட்பாளர் பட்டியல் என்றார்.