கையெழுத்திட்ட கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்
சென்னை: காங்கிரஸுடன் ஏற்படுத்திக் கொண்ட லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்ட கையோடு திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு மு.க.ஸ்டாலின் விஜயம் செய்தார்.
கருணாநிதி இல்லாமல் நடைபெறப் போகும் முதல் லோக்சபா தேர்தல் இது. இத்தேர்தலை தலைவராக முதல் முறையாக சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின். இன்று தனது முதல் தேர்தல் உடன்படிக்கையை அவர் காங்கிரஸுடன் மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து உற்சாகமாக பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், நேராக கலைஞர் நினைவிடம் நோக்கி பறந்தார். கருணாநிதி இல்லாமல் தனது தலைமையில் செய்யப்பட்ட முதல் கூட்டணி ஒப்பந்தம் என்பதால் செண்டிமெண்டாக கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் உருகி நின்றார்.
அதன்பிறகு அங்கே நாற்காலி போட்டு அமர்ந்த அவர், டி.ஆர்.பாலு, துரைமுருகன், உள்ளிட்ட நிர்வாகிகளோடு ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருந்தார். அறிவாலயத்தில் நடக்கும் எந்த ஒரு முக்கிய நிகழ்விலும் தவறாது ஆஜராகும் நபர் ஆ.ராசா. ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணி உடன்படிக்கை நிகழ்வில் ஆ.ராசா கலந்துகொள்ளவில்லை.
மேலும், கடந்த கால தேர்தல்களில் காங்கிரசுடன் கூட கூட்டணி பேச்சு வழவழ என நீண்டுகொண்டே போகும். ஆனால் இம்முறை கறாராக இருந்த ஸ்டாலின் கூட்டணி பேச்சை சட்புட்டுன்னு முடித்துவிட்டதை எண்ணி புளங்காகிதம் அடைகின்றனர் உடன்பிறப்புக்கள்.
இதனிடையே பாஜக பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஜெயலலிதா நினைவிடம் செல்லாததை நினைத்து ஜெ.விசுவாசிகள் பலர் புலம்பத் தொடங்கியுள்ளனர்.