ஒருத்தர் ஸ்கூலுக்குப் போறார்.. இன்னொருத்தர் கிரிக்கெட் ஆடுறார்.. ஜாலியாதான் இருக்கு திமுக, அதிமுக!
Recommended Video
சென்னை: அரசியல் களம் உள்ளாட்சித் தேர்தலால் கதகதவென இருந்தாலும் கூட முக்கியத் தலைவர்கள் ரிலாக்ஸ் ஆக ஆரம்பித்து விட்டனர்.
தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வென்று திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2வது இடத்தைப் பிடித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளும் தங்களது சத்துக்கு ஏற்ப ஜெயித்துள்ளன.
இந்த தேர்தலில் என்ன விசித்திரம் என்றால் யாருமே கவலையுடன் இல்லை. எல்லோருமே உற்சாகமாகவே இருக்கின்றனர். மகிழ்ச்சியாக உள்ளனர். எங்களை வெற்றி பெற வைத்த என்றுதான் அத்தனை பேரும் ஒரே குரலில் வாக்காளர்களுக்கு நன்றி கூறிக் கொண்டுள்ளனர்.
நேற்று திமுக
இந்த நேரத்தில் இரண்டு சுவாரஸ்யமான நிகழ்வுகளை தமிழக மக்கள் நேற்றும் இன்றும் கண்டு ரசித்துள்ளனர். நேற்று நடந்தது திமுக முகாமில். இன்று நடந்தது அதிமுக தரப்பில். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தான் படித்த பள்ளிக் கூடத்திற்கு விசிட் அடித்தார்.. பள்ளித் தோழர்களுடன் கலந்துரையாடினார். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடாத குறைதான்.
ஸ்கூலுக்குப் போன ஸ்டாலின்
ஸ்டாலினின் பள்ளிக் கூடம் சென்னை சேத்துப்பட்டில் உள்ளது. முன்னாள் தோழர்களுடன் ஸ்டாலின் நேற்று அங்கு விசிட் அடித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவரது பால்ய நண்பரான ஷியாம் சுந்தர் என்பவர் கூறுகையில், ஸ்டாலின் எங்களுடன் மிகவும் இயல்பாக பழகுவார். அப்போதே தெரியும் அவர் அரசியலுக்கு வருவார், சாதனை படைப்பார் என்று நெகிழ்ந்து கூறினார்.
அதிமுகவின் பதிலடி
இது திமுக தரப்பில் நேற்று நடந்த சுவாரஸ்யம். இன்று அதிமுக தரப்பு தன் பங்குக்கு ஒரு சுவாரஸ்ய நிகழ்வை நடத்தி அசரடித்தது. இதில் ஹீரோக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர் ஜெயக்குமாரும்தான். ஆம் முதல்வர் பேட்டைப் பிடிக்க.. ஜெயக்குமார் பந்து வீச.. ஆமாங்க இருவரும் கிரிக்கெட் ஆடி கலக்கினர்.
கிரிக்கெட் விளையாடிய முதல்வர்
சென்னையில் ஐஏஎம் - ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போதுதான் கிரிக்கெட் போட்டியை ஆடி தொடங்கி வைத்தார் முதல்வர். பக்கா யூனிபார்மில் முதல்வரும், ஜெயக்குமாரும் கலக்கினர்.
முதல்வர் பேட் பிடிக்க
ஜெயக்குமார் பவுலிங் போட்டபோது அதை லாவகமாக பேட்டில் வாங்கி ஷாட் அடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பந்தை அடித்து விட்டு நிமிர்ந்தபோது அடடா அத்தனை பெருமிதம் முதல்வரின் முகத்தில். அதேபோல டிஜிபி ஜே.கே. திரிபாதியும் பவுலிங் போட அதையும் முதல்வர் விடாமல் வாங்கி அடித்து கலக்கினார். இப்படியாக அந்த இடத்தில் கலகலப்பு கூடியது.
மக்களையும் பாத்துக்கங்க
மொத்தத்தில் நேற்று திமுகவும், இன்று அதிமுகவும் கலகலப்பை ஏற்படுத்தி விட்டன.. அதேபோல தாங்கள் சந்தோஷமாக இருப்பது போல தங்களை நம்பியுள்ள மக்களையும் இந்த இரு கட்சிகளும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டால், ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிதான்!