புத்தாண்டை கொண்டாட இரவா பகலா?.. "சியர்ஸ்" போதுமே.. சென்னை ஓட்டல்களில் பகலில் களைகட்டும் பார்ட்டிகள்
சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் பகல் நேரத்திலேயே புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல ஹோட்டல்களில் களை கட்ட தொடங்கிவிட்டன.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா இந்தியாவில் பரவி வருகிறது.
தமிழகத்திலும் ஒருவர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை, புதுவையில் இன்று இரவு 10 மணிக்கு ஹோட்டல்கள், மதுபான பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- தெலுங்கானா, புதுவையில் அனுமதி!!
ஊரடங்கு
அது போல் சென்னையில் உள்ள 75 மேம்பாலங்களை மூடுவதற்கு காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவுள்ளன. அதாவது இரவு நேரத்தில் முக்கிய சாலைகள் தடுப்பு போட்டு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
கமிஷனர் தகவல்
அத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க இன்று இரவு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
மனமுடைந்த இளைஞர்கள்
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு மக்கள் வர வேண்டாம் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளதால் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட முடியாமல் மனமுடைந்தனர்.
களை கட்டிய கொண்டாட்டம்
இதனால் புத்தாண்டை கொண்டாட இரவு என்ன, பகல் என்ன, நமக்கு தேவை கொண்டாட்டம் என்ற ரீதியில் சென்னையில் பகல் நேரத்திலேயே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. நட்சத்திர ஹேட்டல்களில் களைகட்டிய கொண்டாட்டங்கள் இரவு 9.30 மணி வரை தொடரும்.
தடை விதிப்பு
இரவு நேரங்களில் தடையை மீறி ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது. ஆனால் தற்போது பகலிலேயே கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன, நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரவு கொண்டாடத்தான் தடை என்றாலும் மக்கள் கூடுவதற்குத்தான் அது போன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளனவே தவிர இரவு , பகல் என்றெல்லாம் இல்லை.