+2 ரிசல்ட்.. நாடு முழுக்க ஒரே கணக்கீடு முறையை பயன்படுத்த வேண்டியதில்லை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நாடு முழுவதும் ஒரே முறையை பயன்படுத்தி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை கணக்கிட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுக்க ஆந்திர பிரதேச மாநிலம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வுகள் கைவிடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் மாணவர்களை தேர்வு எழுத வர சொல்ல முடியாது என்பதால் தேர்வுகள் கைவிடப்பட்டுள்ளன.
இறுதி தேர்வு இன்றி மாணவர்களை அனைவருக்கும் தேர்வு முடிவுகளை கணக்கிடும் முறைகளை மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறைகளை பின்பற்ற உள்ளது.
இந்த நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கான்வில்ஹார், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வு முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் 12ஆம் வகுப்பு மாநில பாடத் திட்ட தேர்வுக்கான முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த பொதுநல வழக்கில், நாடு முழுவதும் ஒரே முறையை பயன்படுத்தி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை கணக்கிட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில போர்ட் என்று எதுவாக இருந்தாலும் அவர்களே மதிப்பெண் கணக்கிடும் முறையை முடிவு செய்யலாம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பாட திட்டம் வேறு மாதிரி உள்ளது. அப்படி இருக்கும் போது ஒரே மதிப்பெண் கணக்கீட்டு முறையை மேற்கொள்ள உத்தரவிட முடியாது. இதனால் மாநில அரசுகள், வல்லுநர்களிடம் ஆலோசித்து, மதிப்பெண் கணக்கிடும் முறையை இறுதி செய்யலாம்.
ஆனால் இந்த முறையை பற்றி உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் என்று இன்னும் 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.