'உஷார்..' உரிய ஆவணம் இல்லையா.. அப்போ பறிமுதல் தான்.. பறக்கும் படை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் பறக்கும் படைகளை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாளாகும். நாளைய தினம் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட உள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஆகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, பாமக போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் 24 மணிநேரமும் சோதனை நடத்தும் விதமாக பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும், ஒரு செயற் குற்றவியல் நீதிபதி மற்றும் இரண்டு காவலர்கள் கொண்ட பறக்கும் படைகளை அமைக்க வேண்டும். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கு ஒரு பறக்கும் படை இடம்பெற வேண்டும்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.