"அந்த" ஒரு வார்த்தை.. அதுதான் சர்ச்சைக்கே காரணம்.. சசிகலாவின் விலகல் அறிக்கையில் இருக்கும் "மெசேஜ்"!
சென்னை: திடீர் என்று.. அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்து இருப்பது அமமுக தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. "ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது" என்று தினகரனே சொல்லும் அளவிற்கு சசிகலாவின் முடிவு பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. ஆனால் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் "சில விஷயங்கள்" பெரிய அளவில் சந்தேகங்களை கிளப்பி உள்ளது!
2005ல் வெளியாகி ஹிட்டான படம் சந்திரமுகி. இந்த படம் என்னவோ சந்திரமுகி பற்றிய கதை என்றாலும் படத்தில் ஒரு பாம்பு அடிக்கடி வந்து போகும். கோட்டைக்குள் இருக்கும் அந்த பாம்பு வரும்போதெல்லாம்.. ஏதோ செய்ய போகிறது, என்னவோ பண்ண போகிறது என்ற பதற்றம் ஏற்படும்.
ஆனால் படம் முடியும் வரை அந்த பாம்பு எதுவும் செய்யாது.. கடைசி வரை எதுவும் செய்யாமல் கிளைமேக்சில் கோட்டையை விட்டே வெளியே சென்றுவிடும். அந்த பாம்பின் கதையை போலத்தான் இத்தனை நாட்கள் பரபரப்பை, பதற்றத்தை கிளப்பிய சசிகலா இப்போது எதுவும் செய்யாமல் திடீர் என்று அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்து இருக்கிறார்.
சசிகலா அரசியலை விட்டு ஒதுங்க பாஜக அழுத்தம் தரவில்லை... சொல்வது வானதி சீனிவாசன்
கடிதம்
இப்படி திடீர் என்று விலகினாலும் கூட சசிகலா தனது அறிக்கையில் சொல்லி இருக்கும் சில விஷயங்கள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன. நேற்று இணையம் முழுக்க இவரின் அறிக்கையை வைத்து பலர் விவாதங்களை செய்து வந்தனர். சசிகலா தனது அறிக்கையில் என்ன கூறியுள்ளார் என்று முதலில் பார்க்கலாம். அவர் தனது அறிக்கையில், நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சி தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
எதிரி
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
அம்மா
அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
ஒதுங்குகிறேன்
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்., என்று சசிகலா குறிப்பிட்டு இருக்கிறார். இதில் சசிகலா குறிப்பிட்டு இருக்கும் 3 விஷயங்கள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
விலகல்
இந்த அறிக்கையில் சசிகலா எங்குமே நான் அரசியலை விட்டு விலகுகிறேன், பொது வாழ்வை விட்டு விலகுகிறேன் என்று அறிவிக்கவில்லை. மாறாக மிக கவனமாக சசிகலா "ஒதுங்குகிறேன்" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது ரிட்டயர்மென்ட் என்று சொல்லாமல் "STAYING AWAY" (ஒதுங்கி இருப்பது) என்றுதான் சசிகலா குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் சசிகலா உண்மையில் அரசியலில் இருந்தே விலகிவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
கேள்வி
தேர்தல் நேரத்தில் அதிமுகவின் வாக்குகளை காலி செய்துவிட கூடாது என்பதால், அதிமுக தோற்றால் அதற்கு தான் காரணமாக இருந்துவிட கூடாது என்பதால் சசிகலா இப்படி கவனமாக, தற்காலிகமாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளாரா என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. தேர்தலுக்கு பின் மீண்டும் வந்துவிடுவேன் என்று சசிகலா அனுப்பும் மெசேஜாகவும் பார்க்கப்படுகிறது.
மெசேஜ்
அதோடு சசிகலா இந்த அறிக்கையை ஒரு லெட்டர் பேடில் கூட அடிக்காமல் சாதாரண ஏ4 வெள்ளை தாளில் கொடுத்து இருப்பதும் நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு அரசியல் தலைவர் தனது முக்கியமான அறிக்கையை இப்படி சாதாரணமாக வெளியிடுவது ஏன்? மொத்தமாக விலகுவதாக இருந்தால் இவ்வளவு சிம்பிளாக அறிவிப்பு வெளியாகுமா? என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஆட்சி
இதெல்லாம் போக அதிமுகவின் பொற்கால ஆட்சிக்கு வழிவிட்டு செல்வதாக சசிகலாவே கூறிவிட்டார். இதன் மூலம் அதிமுகவிற்கும், அதன் தற்காலிக தலைவருக்கும், தனக்கும் எந்த மோதலும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். உங்களுக்கு இடைஞ்சலாக நான் இருக்க மாட்டேன் என்பதை சசிகலா இபிஎஸ் - ஓபிஎஸ் இருவருக்கும் உணர்த்திவிட்டார்.
இணைப்பு
இது ஒரு வகையில் அதிமுக தரப்பிற்கு பெரிய நிம்மதியை கொடுத்து உள்ளது. சசிகலா இருந்தால் மட்டும் என்ன செய்துவிடுவார் என்ற கேள்வியை தாண்டி.. அதிமுக தரப்பிற்கு இது ஒருவகையில் அசுவாசத்தை கொடுத்துள்ளது. அதிமுகவிற்கு சசிகலா அனுப்பிய வெள்ளை சமாதான புறாதான் இந்த வெள்ளை பேப்பர் அறிக்கை.. கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் அதிமுகவிற்கு இது உதவியாக இருக்கும்.
உதவி
அதிமுக இன்னும் தீவிரமாக, டென்ஷன் இல்லாமல் தேர்தல் பணிகளை செய்ய இந்த அறிக்கை உதவும். அதேபோல் மாவட்ட அளவில் இருக்கும் பூசல்களும், கோஷ்டி மோதல்களும் அடங்க வாய்ப்புகள் உள்ளன. படத்தின் கடைசியில் சுபம் போடுவது போல அதிமுக - சசிகலா பரபரப்பு அடங்கி இருக்கிறது. ஆனால் இந்த சுபம் கண்டிப்பாக முடிவாக இருக்காது.. இனி நடக்க போகும் பார்ட் 2 கதைக்கான தொடக்கமே இந்த அறிக்கையாகத்தான் இருக்க போகிறது!