ஸ்டெர்லைட்டால் தூத்துக்குடியில் சரி செய்ய முடியாத அளவிற்கு பாதிப்பு.. ஐகோர்ட்டில் வாதம்
சென்னை: தூத்துக்குடியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டு, மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை ஸ்டெர்லைட் நிறுவனம் பாடி வருவதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புகார் கூறியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 10-வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் நிலத்தடி நீர், காற்று மாசுவை ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியது உண்மை என்றார்.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல்வேறு வகை மாசுகளை ஏற்படுத்தியுள்ளது. இது பல்வேறு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் ஆலையால் ஏற்படும் மாசின் அளவு அதிகரித்துள்ளது. ஆலையில் இருந்த கழிவுக்குட்டையில் சல்பைடு, மக்னீசியம் உள்ளிட்ட வேதிப் பொருள்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவை விட அதிகமாக இருந்ததை ஆய்வறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
எந்த மாசையும் ஏற்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஆலைக்கு தான் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி நகரம் சரி செய்ய முடியாத பாதிப்பை சந்தித்துள்ளது என வாதிட்டார்.
விதிகளை பின்பற்றாததால் ஒவ்வொரு முறை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட போதும், சில நிபந்தனைகளை மட்டும் பூர்த்தி செய்துவிட்டு, நீதிமன்றம் மூலம் ஆலையை இயக்க அனுமதி பெற்று விடுவதாக குறிப்பிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
எனவே இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் தான் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.