இன்னுமா இருக்கு.. தினகரனின் அதிமுக ஸ்லீப்பர் செல்கள்?
சென்னை: தினகரன் அமமுகவை ஆரம்பித்தது முதல் அதிமுகவில் தனது ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர் என்று கூறி வந்தார். ஆனால் அந்த ஸ்லீப்பர் செல்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் அவர்களை வைத்து தினகரனால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
இதன் பின்னரும், 3 எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக தினகரனை ஆதரித்து வந்தனர். இதனால் அவர்கள் மூவருக்கும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாலும் நீதிமன்ற தலையீட்டாலும் அந்த மூன்று எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர்கள் மூவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தான் தொடருகிறோம் என்று கூறிவிட்டனர்.
இந்த நிலையில் சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து இவர்கள் மூவரும் தொடர்ந்த வழக்கு வரும் 30 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது மூவரும் வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து இவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட சபாநாயகருக்கு கொறடா ராஜேந்திரன் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய டிடிவி தினகரன் "இப்போது அதிமுகவுக்கு சென்றிருக்கும் மூன்று எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் சொல்லிவிட்டுதான் அதிமுகவுக்கு சென்றுள்ளார்கள். அமமுகவுக்கு மூன்று எம்.எல்.ஏ.க்கள்தான் ஆதரவாக இருந்தனர். ஏப்ரல் மாதம் கட்சியை பதிவு செய்ய முடிவெடுத்தபோது, மூவரையும் அதில் கையெழுத்திட வேண்டாம் என்று நான்தான் சொன்னேன்" என்றும் தினகரன் கூறியுள்ளார்.
ஏற்கனவே தனது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்று தினகரன் கூறிவந்தார். அவர்கள் தேவைப்படும்போது தனக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று கூறிவந்த நிலையில் அந்த ஸ்லீப்பர் செல்களை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து தினகரனால் எழுப்ப முடியவில்லை. அதனால் அதிமுகவுக்கு எதிராக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதே வேளையில் கடந்த மக்களவை தேர்தலின்போது அவருக்கு அதிமுக அமைச்சர்கள் சிலர் பொருளாதார உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துகொண்டே அமமுகவில் பொறுப்பில் இருந்து வந்த கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏ.க்களும் இப்பொதௌ தன்னிடம் கூறிவிட்டுத்தான் அதிமுகவில் இணைந்துள்ளனர் என்று தினகரன் கூறுகிறார் என்றால் தனது அதிகாரப்பூர்வ ஸ்லீப்பர் செல்களாகத்தான் அவர்களை தினகரன் அனுப்பியுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. இதை தெரிந்தும் அதிமுக அவர்களை தங்களோடு இணைத்துள்ளதா என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.