சென்னையில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு... குடையோட போங்க மக்களே - வெதர்மேன் நல்ல செய்தி
மேற்கில் இருந்து சென்னை மாநகருக்குள் நகரும் காற்று காரணமாக அடுத்த 10 நாட்களில் தினமும் மாலை, இரவு நேரங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் நேற்று அறிவித்திருந்து.
வட கடலோர மாவட்டங்களிலும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை முதல் 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் இன்று முதல் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேகங்கள் மேற்கில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர் பெல்ட்டை நோக்கி செல்வதாகவும் கடற்காற்று வீசுவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பருவமழை இந்த 5 மாவட்டங்களில் ஜில்லென மழை பெய்யும் - 4 மாநிலங்களில் 2 மாதத்திற்கு மழை அடி தூள்
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த கால கட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே வட இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் பருவமழை கொட்டித்தீர்க்கிறது. கிழக்கு மேற்கு, தென் மாநிலங்களிலும் பருமழை தீவிரமடைந்துள்ளது. பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்த மாதம் வழக்கத்தை விட அதிக மழை பொலிவு இருக்கும்.
தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் கோவா, மத்திய மகாராஷ்டிரா, தெற்கு குஜராத், வடகிழக்கு மாநிலங்கள், பீகார் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை சராசரி அளவாகவே இருக்கும். தென்மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகள், மத்திய மாநிலங்களின் பகுதிகளில் சராசரிக்கும் சற்று அதிகமான அளவு மழை பொலிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.