பிளஸ் 2 பாட புத்தகத்தில் ஐன்ஸ்டைன், எடிசன், மார்கோனி வரிசையில் "பேட்மேன்" அருணாசலம் முருகானந்தம்
சென்னை: மலிவு விலையில் சுகாதாரமான நாப்கினை கண்டுபிடித்த அருணாசலம் முருகானந்தம் பற்றிய தகவல்கள் தமிழக அரசின் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்தவர் அருணாசலம் முருகானந்தம் (56). மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக் குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர்.
வணிகமுறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக் கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி நாப்கின்களை தயாரித்து வருகிறார்.
டைம் பத்திரிகை
வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கியுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்' வார இதழ்உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது.
ஆஸ்கர் விருது
இவரது வாழ்க்கைக் கதையை இந்தி திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி 'பேட்மேன்' (Pad Man) என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார். இந்த படத்தில் அக்ஷய்குமார் நடித்திருந்தார். மேலும் இவர் நடித்துள்ள ஒரு ஆவணப்படத்திற்கு 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
மனித இனப்பெருக்கம்
இந்த நிலையில் கோவை முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறும் அவரது கண்டுப்பிடிப்பும் புதிதாக தயாரிக்கப்பட்ட பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. விலங்கியல் பாடபுத்தகத்தில் மனித இனப்பெருக்கம் என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழக அரசு
ஐன்ஸ்டைன், மார்கோனி, தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் குறித்தும் அவர்களது கண்டுபிடிப்பு குறித்தும் படித்து அறிந்து கொண்ட தமிழக மாணவர்கள் முதல்முறையாக தமிழரான அருணாசலம் முருகானந்தத்தை பற்றி படித்து தெரிந்து கொள்ள போகிறார்கள். இது போன்ற கவுரவத்தை தந்த தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.