இரவில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை... வாகனங்களும் பறிமுதல்... மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
சென்னை: இரவு நேரங்களில் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னையில் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், இரவு லாக்டவுனில் எதற்கெல்லாம் அனுமதி உண்டு என்பது தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளை போலீசார் செயல்படுத்துவார்கள் எனத் தெரிவித்தார். மேலும், இரவு முழு லாக்டவுன் அமல்படுத்தும்போது பாதுகாப்புப் பணியில் இரண்டாயிரம் போலீசார் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் 200 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் போலீசார் ஈடுபடுவார்கள் என்று கூறிய அவர், முக்கிய சாலைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நகரிலுள்ள மேம்பாலங்கள் அனைத்தும் இரவு நேரங்களில் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இரவு முழுவதும் வாகன சோதனையைத் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுவையில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு... எதற்கெல்லாம் தடை? ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடி
இரவு நேரத்தில் முழு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், லாக்டவுன் உத்தரவை மீறி இரவு நேரங்களில் வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஞாயிறுகளில் முழு ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்கள் அழைப்பிதழை போலீசாரிடம் காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல இரவு லாக்டவுன் சமத்திலும் ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்பவர்கள் டிக்கெட் காட்டினாலே போதும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
சென்னை மக்கள் இரவு முழு ஊரடங்கிற்கும் முழு ஊரடங்கிற்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று சென்னை போலீஸ் மகேஷ் குமார் அகர்வால் கூறினார்.