பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. செப். 4ஆம் தேதி தரவரிசை பட்டியல்
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் பல மாதங்களாகவே மூடப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
+ 2 தேர்வு
கொரோனா 2ஆம் அலை காரணமாக +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. 10,11 வகுப்பு மதிப்பெண் மற்றும் +2 பருவ தேர்வில் எடுத்த மதிப்பெண்களை வைத்து +2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.
பொறியியல் கலந்தாய்வு
இந்நிலையில் தற்போது பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து Directorate Of Techinical Education எனப்படும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் பி.இ., பி.டெக். போன்ற பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி எப்போது
நாளை முதல் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை www.tneaonline.org அல்லது www.tndte.gov.in அல்லது இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் செப்டம்பர் 4ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் நாட்கள்
மேலும், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 4- ஆம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறுகிறது.