தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை
சென்னை: கொரோனா காலத்திலும் மாணவர் சேர்க்கை தமிழக அரசுப் பள்ளிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பலரும் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகளில் கடந்த கல்வியாண்டின் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளில் படித்து வந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் அங்கிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்! ஷாக் தரும் இந்தியா
அதிகரித்தது ஏன்
அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்திருப்பது ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டதால் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனாலேயே பலரும் தனியார் பள்ளியில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
தினசரி பதிவு செய்ய உத்தரவு
இதனிடையே எல்கேஜி முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறையின் இஎம்ஐ கணினி தளத்தில் பதிவு செய்யவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு சேர்க்கை
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளிலும் 2019-20ம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அதற்கான ஏ படிவத்தில் பள்ளிகள் வாரியாக பெறவேண்டும்.
செப்.30 வரை சேர்க்கை
அதை பி-படிவத்தில் தொகுத்து வழங்க வேண்டும். அதேபோல், இந்த கல்வியாண்டு 2020-21ம் கல்வியாண்டில் வரும் 30ம் தேதி வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் சி படிவத்தில் பள்ளிகள் வாரியாக பெறவேண்டும். டி படிவத்தில் தொகுத்து வழங்க வேண்டும். அதை தனித்தனியாக பள்ளிக்கல்வி இயக்குனருக்கு இ-மெயில் மூலம் வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நடக்காத ஒன்று
இதனிடையே நேற்றைய நிலவரப்படி 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கை செப்டம்பர் 30ம் தேதி வரை நடப்பதால் அக்டோபர் 5ம் தேதி தான் தமிழகம் முழுவதும் மாணவர்கள் சேர்ந்த முழு விவரங்கள் அறிய முடியும். தமிழகத்தில் 15லட்சம் மாணவ மாணவியர் அரசு பள்ளிகளில் இதுவரை சேர்ந்திருப்பது தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் ஆரம்பித்த பின்னர் நடக்காது ஒன்றாக இருந்தது. இப்போது முதல்முறையாக இவ்வளவு பெரிய அளவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.