அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்.. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த திங்கட்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவது, மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு உள்ளிட்ட காரணங்களால் கலை-அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்-மாணவிகளிடம் அதிகரித்துள்ளது. பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில், கலை-அறிவியல் படித்தால் எம்.பி.ஏ. உள்ளிட்ட உயர்நிலை படிப்புகளை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு பெறும் நிலை உள்ளது
இதனால் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.இளநிலை படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபி, மலையாளம், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட மொழிப்பிரிவுகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதே போல கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளுக்கும் சராசரியாக விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுச் செல்கின்றனர். இருக்கின்ற 13 துறைகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பிகாம் மற்றும் பிஏ புரொபஷனல் அக்கவுண்டிங் படிப்புகளுக்கு அதிக போட்டி நிலவுவதாக கல்லூரி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பிகாம் மற்றும் பிஏ பயிலும் போதே, சிஏ பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் இப்பிரிவில் சேர மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 21 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகள் அனைத்திலும் விண்ணப்ப விநியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை போலவே அறிவியல், கலை சார்ந்த படிப்புகளிலும் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.