ஆன்லைன் வகுப்புகள் ஓகேதான்.. இத்தனை சவால்கள் இருக்கே.. அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லாருக்கும்!
சென்னை: தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளிகளிலும் வரும் 13-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். அரசின் ஆன்லைன் வகுப்புகள் முயற்சி பாராட்டுக்குரியதாகவே இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியமானது? என்கிற சந்தேகங்களை எழுப்புகின்றன பல கேள்விகள்.
கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் இருந்தே கொரோனாவை எதிர்கொண்டிருக்கிறோம்.
இதனால் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் பெரும் சிக்கலுக்குரியதாகின. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆனாலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் வழங்குதல், ஆண்டு கட்டணம் செலுத்துதல் என செயல்பாடுகள் தொடருகின்றன. அத்துடன் ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் வகுப்புகள் முறை
ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் 2 வகைகளாக நடத்துகின்றன. ஒன்று லைவ்வாக ஆன்லைன் வகுப்புகளை நடத்துதல், மற்றொன்று வீடியோக்களை குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்தல். இந்த செயல்பாடுகளுக்காக வாட்ஸ் அப், டெலிகிராம் குரூப்புகளை பள்ளிகள் உருவாக்கி பெற்றொருக்கு அறிவுறுத்தல்கள் தருகின்றன.
பெற்றோருக்கு நெருக்கடி
இது மிகவும் ஆரோக்கியமான முயற்சி; நல்ல முயற்சி. ஆனால் இணையத்தையும் மொபைலையும் மட்டுமே சார்ந்த இந்த கல்விமுறை என்பது 100% பெருநகரங்களுக்கு மட்டும்தான் சாத்தியமானது. திண்டுக்கல் போன்ற 2-ம் நிலை நகரங்களில் கூட இது 100% சாத்தியம் என்று கூறிவிட முடியாது. ஆன்லைன் வகுப்புகளால் ஆண்ட்ராய்டு மொபைல் போன், தடையற்ற இணைய இணைப்புக்கு பெற்றோர் செலவிட்டாக வேண்டிய நெருக்கடி உருவாகிறது.
கிராமப்புற பெற்றோர்
நகரங்கள், 2-ம் நிலை அல்லது சிறுநகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள் ஓரளவு இதனை சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமப்புறங்களில் அதுவும் இன்னமும் செல்போன் சிக்னலே சரியாக கிடைக்காத கிராமங்களில் உள்ள மாணவர்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது பெரும் கேள்வி. அனைத்து கிராமங்களிலும் அனைத்து மொபைல்களுக்கும் சிக்னல் கிடைக்கிறது என்றெல்லாம் சொல்லவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.
அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்
இப்படியான சிக்கல் இருக்கும் போது கிராமப்புற மாணவர்களை மட்டுமே கொண்ட அரசு பள்ளிகளிலும் ஜூலை 13 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. கிராமப்புறங்களில் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் பெற்றோர் எண்ணிக்கை நிச்சயம் குறைவுதான். அப்படியே இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான டேட்டாவுக்கு எவ்வளவுதான் அவர்களால் செலவிட முடியும்? அதுவும் லாக்டவுன் காலத்தில் இது எந்த அளவு சாத்தியமானது?
போன் சிக்னல்கள் பிரச்சனை
வழக்கமாக வரும் போன் அழைப்புகளுக்கே மொட்டை மாடியிலும் ரோட்டிலும் நின்றுதான் கிராமங்களில் இருந்து பதில் பேச வேண்டிய நிலையில் பல ஆண்டுகளாக சிக்னல் வீக்காகவே இருக்கிறது. கிராமப்புற நிலைமை இப்படி இருக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் எந்த அளவுக்கு சாத்தியமாகிறது? முதலில் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்துவதற்கான இணைய இணைப்பு, டேட்டா தேவை என்பவற்றுக்கே பெரும் சிக்கல் இருக்கிறது. ஆகையால் இத்தகைய அம்சங்களை கணக்கில் கொண்டுதான் ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோள்.