மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இரண்டு ஆசிரியர்களுக்கு ஜெயில்.. ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 5 மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் நாகராஜ் மற்றும் புகழேந்தி.
50 வயதை கடந்த இவர்கள் தனக்குக் கீழ் படிக்கும் மாணவிகளிடம் 2012 ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. செல்போனில் ஆபாச படங்களை காண்பிப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இவர்கள் மீது செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் மாணவிகள் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு, அவர்களை குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுதலை செய்தது. போதிய ஆதாரம் இல்லை என்றும் உள்நோக்கத்தோடு இந்த புகார்கள் அளித்துள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் நான்கு பேர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஒரு சாட்சியம் போதும்
இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒரு சாட்சியம் இருந்தாலே போதுமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும்,இந்த வழக்கில் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. எனவே இரண்டு ஆசிரியர்களின் விடுதலையை ரத்து செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஆசிரியர்களுக்கு தண்டனை
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு கடந்த வாரம் தீர்பபளித்த நீதிபதி வேல்முருகன் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி அவர்கள் இருவரும் அறிவிக்கப்படும் எனவும் அன்று இருவரையும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
ஆசிரியர்கள் வாதம்
அதன்படி இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் நீதிபதி வேல்முருகன், தண்டனை குறித்தும் குற்றவாளிகள் ஏதேனும் கூற விரும்பும் உள்ளதா? என கோரினார். இதற்கு பதில் அளித்த முதல் குற்றவாளி நாகராஜ், தன்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் சிக்க வைத்ததாகவும். எனக்கும் இந்த வழக்குற்கும் எந்த சம்பந்தம் இல்லை நான் நிரபராதி எனவும் தான் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதாகவும் தெரிவித்தார். இரண்டாவது குற்றாவளியான புகழேந்தி சக ஆசிரியர்களுக்கு இடையே இருந்த போட்டியில் தன்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் என்னை சிக்கவைத்தாகவும் தான் நிரபராதி எனவும் தெரிவித்தார்.
ஐந்து வருடம் ஜெயில்
இதனையடுத்து தண்டனை தொடர்பாக குற்றவாளிகள் தரப்பில் அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு முதல் குற்றவாளி ஆசிரியர் நாகராஜ்க்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டாவது குற்றவாளியான புகழேந்திக்கு 3 ஆண்டு சிறையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கபட்டனர்.