அரசுப் பள்ளிகளில் படிக்க மாணவர்கள் - கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது
அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றறை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுகிறது.
மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும்பாலும் கல்வித் தொலைக்காட்சி மூலமும் சில நேரங்களில் ஆன்லைன் மூலமாக வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கல்வி முறையில் மாற்றம்
காலையில் வகுப்பறைகளுக்கு சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் இப்போது கேமரா முன்பாக நின்று வகுப்பறை போல பாவித்து பாடம் நடத்த ஆரம்பித்து விட்டனர். மாணவர்கள் பள்ளிக்கு போய் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. படிக்கும் முறையே மாறிவிட்டது. மொபைல் போனும் டிவியும் கதி என்று இருக்கின்றனர் மாணவர்கள்.
கல்வி டிவி
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை, மாணவர்கள் இல்லங்களில் முறையாக கவனிக்கின்றனரா? என்பது குறித்து மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியருக்கு விருது
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 1 லட்சம் மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அரசுப் பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையும் மறுக்கக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் சேர்க்கை
கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வேலையிழந்துள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பிற்கு மட்டும் 75 சதவிகிதக் கல்வி கட்டணம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளிலும் அரசு பள்ளிகளிலும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.