கொடுமையிலும் கொடுமை... பட்டினி வயிற்றில் நீட் பரீட்சை... மதிய உணவை மறந்த மாணவச் செல்வங்கள்..!
சென்னை: பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வுக்கு காலை 11 மணி முதலே தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் பசி, பட்டினியோடு மதிய உணவு சாப்பிடாமல் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
தேர்வு மைய வளாகத்திற்குள் உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் அனுமதி கிடையாது என்பதால் பெற்றோரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
நீட் தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. தமிழகத்தில் சரிந்த எண்ணிக்கை.. ஷாக்கிங்
11 மொழிகள்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் 3,842 மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. 11 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை இந்த தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக காலை 9 மணி முதலே தேர்வு எழுதும் மையங்களுக்கு மாணவர்களும், பெற்றோர்களும் வருகை தரத் தொடங்கினர்.
கொட்டும் மழை
கடமை உணர்ச்சிக்கு அளவில்லாத வகையில் கொட்டும் மழையிலும், கொரோனா ஐயத்திலும் மாணவர்களை சோதனை என்ற பெயரில் வழக்கம் போல் அலைக்கழிக்கப்பட்ட காட்சிகளை பல இடங்களில் காண முடிந்தது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், மக்கள் அதிகாரம், மாணவர் இயக்க மன்றங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள நீட் தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பசி பட்டினியோடு
2 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு காலை 11 மணி முதலே தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 1.30-க்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்பதால் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சோதனைகளை முடித்துக்கொண்டு மையத்திற்குள் செல்ல மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனிடையே இதனால் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட முடியாத அவல நிலை உருவாகியுள்ளது.
உடல் சோர்வு
நீட் தேர்வால் ஏற்கனவே பலரும் மனச்சோர்வில் இருந்து வரும் நிலையில் மதிய உணவும் இல்லாததால் உடல்சோர்வு அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பச்சைத்தண்ணீரை குடித்தபடி பட்டினி வயிற்றோடு பரீட்சை எழுதச்செல்லும் பிள்ளைகளை கண்டு அவர்களது பெற்றோர்கள் கலங்கி நிற்கின்றனர்.