விடாமல் போராடி.. மதுரை கலெக்டரையே மாற்ற வைத்த வெங்கடேசன்.. மார்க்சிஸ்ட்டுக்கு முதல் வெற்றி!
மதுரை கலெக்டர் மாற்றம் என்ற கோர்ட் தீர்ப்பினை சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.
சென்னை: "வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டுமானால், மதுரை கலெக்டர் நடராஜனை மாற்றியே ஆக வேண்டும்" என்று சு.வெங்கடேசனின் விடாப்பிடி கோரிக்கைக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. மதுரை கலெக்டரை மாற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ளதை முழுமையாக வரவேற்பதாக பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.
போன வாரம், மதுரை லோக்சபா தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் தேர்தல் பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து தாசில்தார் சம்பூர்ணம்.. ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து சென்றார்.
இந்த விஷயத்தை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த கட்சியினர் கண்டுபிடித்து சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு தகவல் சொன்னார்கள். இதையடுத்து முதலில் இந்த விஷயத்தில் கொதித்தெழுந்தது சம்பவ இடத்துக்கு கட்சியினருடன் திரண்டது சு.வெங்கடேசன்தான்!
மதுரையில் மறுதேர்தல் நடத்துக... உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
தீவிர விசாரணை
"இவ்ளோ பாதுகாப்பு இருந்தும், வாக்கு எண்ணும் மையத்துக்கு தாசில்தார் வரவேண்டிய அவசியம் என்ன? எதுக்கு வரணும்? தபால் வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் வருகிறது. அந்த ரூம் சீல் செய்யப்படவில்லை. அவரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.
சாவி தந்தது யார்?
ஆவணங்கள் இருந்த அந்த அறையின் சாவியை தந்தது யார்? அறையின் சாவியை கலெக்டருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டுமானால், மதுரை கலெக்டர் நடராஜனை மாற்ற வேண்டும்" என்று வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்தார். இத்துடன் நில்லாமல் வெங்கடேசன் இந்த விவகாரத்தை கோர்ட் வரை கொண்டு சென்றார்.
நேர்மை இல்லை
வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ சென்னை ஐகோர்ட்டில் நேற்று அவசர முறையீடு செய்தார். அதில், "பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். இது தொடர்பாக முறையான விசாரணை நடைபெறவில்லை. காவல்துறை விசாரணை நோ்மையாக இல்லை என்பதால் உயா்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடராஜன்
மேலும் இந்த விஷயத்தில் இந்த அளவுக்கு சர்ச்சை ஏற்பட மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜனே காரணம் என்று சு.வெங்கடேசன் நீதிமன்றத்தில் முறையிட்டார். இது சம்பந்தமாக நாளையே (இன்று) விசாரணை நடத்தப்படும் என்று கோர்ட் தெரிவித்தது. அதன்படி நடந்த விசாரணைக்குப் பின்னர் இடைக்கால உத்தரவின்படி, மதுரை கலெக்டர் மாற்றப்படுவதாக கோர்ட் அறிவித்துள்ளது.
வழக்கு விசாரணை
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆன நிலையில், இதில் மிகுந்த சிரத்தை எடுத்தது சு.வெங்கடேசனும், அவருக்கு உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியும்தான். மேலும் இந்த வழக்கை காரணங்களை சொல்லி தள்ளி போடாமல் நீதிமன்றம் உடனடியாக எடுத்து கொண்டது பாராட்டத்தக்கது.
வரவேற்கிறேன்
அது மட்டுமில்லை.. எந்தவித பாகுபாடும் இன்றி சரமாரியான கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் கேட்டது நியாயமானதே.. நீதிபதிகளின் சில கேள்விகளுக்கு ஆணையம் பதிலளிக்க திணறியதாக கூட சொல்லப்பட்டது. எனினும் நேற்று வழக்கு தொடுத்து, இன்று அதை விசாரித்து, உடனடியாக கலெக்டரை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை முழுமையாக வரவேற்பதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நீதி சாகவில்லை
எப்படியோ.. இப்படி ஒரு அதிரடியால், நீதி சாகவில்லை என்பதும், அது இன்னும் பல்வேறு ரூபங்களில், பல்வேறு தருணங்களில் அவ்வப்போது வெளிப்பட்டு நம் வயிற்றில் பாலை வார்த்து விட்டு போகிறது என்பதையும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை!