எஸ்பிஐ வங்கியில் இந்தி திணிப்பு.. வாடிக்கையாளர்கள் புகார்.. தலையிட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் நகை லாக்கரை திறக்க படிவங்கள் இந்தியில் கொடுத்துள்ளதாக மதுரை எம்பி சு வெங்கடேசன் புகார் அளித்துள்ளார்.
ஒவ்வொரு வங்கியிலும் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் பாதுகாப்பிற்காக நகைகளை லாக்கரில் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த லாக்கருக்கு ஆண்டுதோறும் ஒரு கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
பின்னர் அவருக்கு எப்போது நகை வேண்டுமோ அப்போது வங்கிக்கு போய் லாக்கருக்கான வருகை பதிவேட்டில் என்ட்ரி போட்டுவிட்டு தேவையான நகைகளை அதிகாரி முன்பு எடுத்துக் கொண்டு அதற்கான தகவல்களையும் அங்கிருக்கும் பதிவேட்டில் எழுத வேண்டும்.

வங்கி லாக்கர்
பின்னர் திரும்பி கொண்டு வந்து கொடுக்கும் போது அவர் எடுத்துச் சென்றதும் திருப்பி கொண்டு வந்ததும் சரியாக இருக்கிறதா என ஒரு முறை பார்த்துவிட்டு பின்னர் அதை லாக்கரில் வைப்பது வழக்கம். அது போல் அடமானம் வைப்பதற்கென தனி லாக்கரும் இருக்கும். வங்கியில் சொந்தமாக லாக்கரை பெற அந்த வங்கியின் வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

மதுரை எம்பி
அந்த வகையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் திறக்க இந்தியில் மட்டுமே படிவம் கொடுத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில் பாரத ஸ்டேட் வங்கி, சென்னை ஆர்.ஏ.புரம் கிளையில் வாடிக்கையாளருக்கு, லாக்கர் திறக்க இந்தியில் மட்டுமே படிவம் கொடுத்துள்ளனர்.

ஹிந்தி
புதிதாக வந்துள்ள படிவங்கள் அனைத்தும் ஹிந்தியில் மட்டுமே உள்ளதென கூறுகிறார்கள். ஆட்சி மொழி சட்டத்தை மீறுகிறவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் என கூறியுள்ளார். இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் தினேஷ் குமார் காராவுக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்
அந்த கடிதத்தில் பிராந்திய மொழிகளில் வாடிக்கையாளர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் இல்லை என புகார் எழுந்துள்ளது. சென்னை ஆர் ஏ புரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையின் வாடிக்கையாளர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு லாக்கர் திறக்க வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் தமிழில் இல்லாமல் இந்தியில் இருப்பதாக தெரிவித்தார்.

புகார்
மேலும் அதில் என்ன இருக்கிறது என தெரியாமல் எப்படி கையெழுத்திடுவது என அந்த வாடிக்கையாளர் என்னிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு ஒரு பொதுத் துறை நிறுவனம் இவ்வாறு செய்வது முற்றிலும் சரியல்ல. மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே. எனவே வாடிக்கையாளர்களுக்கு தெரிந்த பிராந்திய மொழிகளில் சேவையை வழங்கினால் அவர்களுக்கு சிரமம் ஏதும் இருக்காது.

உத்தரவிடுங்கள்
வேற்று மொழி பரிமாற்றம் என்பது வாடிக்கையாளர்களை அன்னியப்படுத்திவிடும். தமிழகத்தில் உள்ள அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் இதே நிலைதானா என எனக்கு தெரியவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் கையாளும் அனைத்து விண்ணப்பங்களும் தமிழில் இருக்குமாறு உங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுகிறேன் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications