சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு!
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ கடந்த வியாழக்கிழமை விபத்தில் பலியானார். சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார். கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் முதலில் கட் அவுட் வைத்த கடை சீல் வைக்கப்பட்டது. அதன்பின் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதியப்பட்டது. அவர் தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது இன்று எப்ஐஆர் பதியப்பட்டது. ஆனால் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை!
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை மட்டும் ஏன் கைது செய்யவில்லை, ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.ஜெயகோபால் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெயகோபாலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளது. 10 பேர் கொண்ட பேர் போலீசார் குழு இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.முதலில் ஜெயகோபால் சென்னையில் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்பட்டது.
காலையில் நெஞ்சுவலி என்று கூறி ஜெயகோபால் மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் தற்போது அவர் அங்கு இல்லை. ஜெயகோபால் தனது வீட்டிலும் இல்லை. இதனால் அவர் தலைமறைவாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறி போலீசார் அவருக்கு வலைவீசி இருக்கிறார்கள்.