நிர்மலாவுக்கு பொருளாதாரமே தெரியாது.. வீழ்ச்சிக்கு காரணம் மோடியுடன் உள்ள ஆமாம்சாமிகள்தான்.. சு.சுவாமி
சென்னை: பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடியை சுற்றியுள்ள ஆமாம்சாமி கூட்டங்கள்தான் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி) 2வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எட்டு முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜிடிபி 4.5 சதவீதமாக உள்ளது கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நிர்மலா சீதாராமன்
இதுகுறித்து பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசு வெளியிடுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றாலே என்னவென தெரியாது.
பொய்யான வளர்ச்சி
பிரதமரை சுற்றியுள்ள ஆலோசகர்கள், மோடியிடம் பொருளாதாரம் குறித்த உண்மை நிலையை கூறுவதற்கு அச்சப்படுகின்றனர். அதனால் பொய்யான வளர்ச்சியை கூறி நம்ப வைக்கின்றனர்.
சரிவு
நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கலாம். ஆனால் அவர்களோ 4.5 என சொல்லிக் கொள்கிறார்கள். பொருளாதாரம் மேலும் சரிவை நோக்கி செல்வது என்பது தவிர்க்க முடியாதது.
விரும்பவில்லை
பிரதமரிடம் யாரும் உண்மையை சொல்வதில்லை. அவரை சுற்றி ஆமாம்சாமி கூட்டங்களே உள்ளனர். அவரும் அவர்களையே விரும்புகிறார். என்னை போன்றோரை விரும்புவதில்லை என சுப்பிரமணியன் சுவாமி காட்டமாக தெரிவித்தார்.