1991-ல் திமுக ஆட்சியை கலைத்தது ஏன்? சு.சுவாமி சொல்லும் பகீர் காரணம்!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்பதால் மட்டும் 1991-ல் திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கவில்லை என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
1989 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அப்போது இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றது.
மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட 13 பேர் சென்னையில் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக புகார் கூறப்பட்டது.
1990-91-ம் ஆண்டு பிரதமராக சந்திரசேகர் இருந்த போது அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. திமுகவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை என கூறி அரசியல் சாசனம் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைத்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இதையே தமது வாழ்நாள் சாதனையாக ஒவ்வொரு முறையும் கூறி வருகிறார் சு.சுவாமி. இப்போதும் ட்விட்டரில் தாம் திமுக ஆட்சியை கலைத்த ஜனநாயகப் படுகொலையை பெருமிதத்துடன் பதிவிட்டும் வருகிறார்.
தற்போது இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் கிளர்ந்துள்ளது. இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
In Tamil Nadu due to the British Imperialist brainwashing, some attack Hindi, Sanskrit and Brahmins yet like Karunanidhi have Sanskrit names and worship Brahmin Ravana. In 1991 when I got the DMK govt dismissed under Art 356 all these types hid
— Subramanian Swamy (@Swamy39) 1 June 2019
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது தமிழகத்தில் மூளைச்சலவை செய்ததால் இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பிராமணர்களை தாக்குகின்றனர். கருணாநிதி பிராமண ராவணனை வழிபடுகிறவர். 1991-ல் திமுக ஆட்சியை நான் கலைத்ததற்கு இவையெல்லாமும் காரணங்கள். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருக்கிறார்.
மேலும் தமிழகத்தில் 80% இளைஞர்கள் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை கற்கவிரும்புகின்றனர் என்றும் தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.