"கெத்து" தைரியலட்சுமி.. வாழ்வியல் வலிகளை.. திமிறி கொண்டு வெளியே வந்த நயன்தாரா.. மிளிரும் தனித்துவம்!
நடிகை நயன்தாரா பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது
சென்னை: ஆரம்ப கால முதல் இப்போதுவரை, பெரும்பாலான ஹீரோயின்கள், ஹீரோக்களை சாராமலே தனித்து நின்று வெற்றிகளை பெற முடியுமா என்பது சந்தேகம்தான்.. இதை முதன்முதலில் நொறுக்கியவர் நயன்தாராதான்... அதில் வெற்றிகளை குவித்தவரும்கூட!
புஷ்டியான உடல்வாகு கொண்ட இந்த பெண்ணின் அடையாளம் ஆரம்ப காலத்தில் அவ்வளவாக பேசப்படவில்லை. வல்லவன் படத்தில் இவரது உதட்டை சிம்பு கடித்து இழுத்தபடி போஸ்டர் வரவும்தான் நயன்தாரா பளிச்சென அனைவராலும் தேடப்பட்டார்.
ஆனால், ஹீரோ என்ற பிரம்மாண்டமான ஆலமர நிழலில், ஒட்டிக் கொண்டிருக்கும்படியாகவே ஹீரோயின்களின் சித்தரிப்புகள், நயன்தாராவுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தன. அதனால்தான் இன்று கம்பீரத்தின் காட்சியாகிறார் நயன்தாரா.
நயன்தாரா
கடந்த 15 வருடங்களாகவே நயன்தாராவின் படங்களின் வழியாக அவரின் தனித்துவமான தோற்றமும், மிளிர்ந்த நடிப்பும், முக்கியமாக தன் ஆளுமை மீதான கவனமும் நம்மை ஈர்த்தபடியே இருக்கிறது.. குறுகிய காலத்திலேயே ஆண்களின் நாயகிகளாக மட்டுமே இல்லாமல், பெண்ணின் சுயத்தை அடையாளத்தை அழுத்தமாக பதிவு செய்தவர் நயன்தாரா.
தனி ரகங்கள்
பில்லா, ராஜாராணி, யாரடி நீ மோகினி, நானும் ரெளடிதான், அறம், கோலமாவு கோகிலா, ஏன் சமீபத்தில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் வரை இவரது சொந்த காலிற்கு தளமாக அமைந்த படங்கள்... இவை ஒவ்வொன்றும் ஒரு வகை.. ஒவ்வொன்றும் ஒரு தளம்.. ஒவ்வொன்றும் ஒரு ரகம்..!
உடற்பயிற்சி
எந்த ஒரு நபருமே சோகத்தில் இருந்து தன்னை மீட்டெடுக்கவே மறு போராட்டத்தில் தன்னை சுயமாக ஈடுபடுத்தி கொள்கிறார்கள்.. அதில் நயன்தாராவும் ஒருவர். சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட சோகங்களையே தின்றதாலோ என்னவோ, மனவலிமையை பெறவும், தன்னை நிலைநிறுத்தி கொள்ள இவர் மேற்கொண்ட முயற்சிகளும் அசாத்திய அபாரம்... சிறிது காலம் கழித்து, திடீரென புது பொலிவாக திரும்பி வந்த நயன்தாராவை பார்க்கும்போது, அவரது கடின உடற்பயிற்சிதான் நம் கண்ணுக்கு பளிச்சிட்டது.
வியர்வை
பெரும்பாலும், மிகப்பெரிய துயரிலிருந்து வெளி வருவதற்கு மிகச்சிறந்த வழி உடற்பயிற்சிதான்... இதைதான் நயன்தாராவும் தேர்ந்தெடுத்தார்.. மனதின் வருத்தங்களை எல்லாம் உடற்பயிற்சிகளின் வேர்வைகளில் களைந்து களைந்து தீர்த்தார்.. வெறிகொண்ட வேட்கை, அவரது பாடிஷேப்பில் மிளிர்ந்ததையும் பார்க்க முடிந்தது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைத்துறை வாழ்க்கையிலும், எத்தனையோ தோல்விகளை எதிர்கொண்டு, நம்பிக்கையுடன் அவைகளை கடந்து நின்று, முன்னுதாரணமாகி உள்ளார்..
சினிமா
எப்போதுமே பப்ளிசிட்டிக்குள் வராமலும் தன்னை தற்காத்து கொள்கிறார்.. சினிமா நிகழ்ச்சி, டிவி நிகழ்ச்சி மட்டுமல்ல, ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் என மக்கள் தொடர்பை நேரடியாக அற்று ஒதுங்கி வாழும் வித்தியாசமான நடிகை... இப்படித்தான் இருந்தார் ஸ்ரீதேவியும்.. அதனால்தான் அவர் லேடி சூப்பர் ஸ்டாராக ரொம்ப காலத்துக்கு இருந்தார்.. இப்போது ஸ்ரீதேவி வழியில் நயனும் பாதையை துவக்கி உள்ளார்.
வாழ்த்துக்கள்
அன்று, முறுக்கேறிய மன வலிகளால் நிரம்பி விம்மி விம்மி கிடந்த இந்த பெண்.. இன்று அந்த வலிகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு வெளியே வந்து, கெத்து தைரியலட்சுமியாக தலைநிமிர்ந்து மிளிர்ந்து நிற்கிறார்.. நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இவர் வாழ வேண்டும் என்பதே நம் நெஞ்சார்ந்த விருப்பம்!