வறுமையால் தவித்த சூடான் திருடன்.. கைகாசு போட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பிய சென்னை போலீஸ்
சென்னை: வறுமை காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்த சூடான் இளைஞர், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கைகாசு போட்டு சொந்த நாட்டுகே அவரை அனுப்பி வைத்துள்ளது சென்னை போலீஸ்.
ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டைச் சேர்ந்தவர் முகமது அல் முஸ்தபா. 26 வயதாகும் இவர் கடந்த 2016-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம். படிப்பதற்காக இந்தியா வந்தார்.
ஒரு வருடம் படிப்பை முடித்து விட்டு கடந்த 2017-ம் ஆண்டே முஸ்தபா சொந்த நாட்டிற்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஒரு பாடத்தில் பெயில் ஆகி அரியர் வைத்திருந்தால் சொந்த நாட்டுக்கு செல்லவில்லை.
அனுமதிக்க மாட்டோம்.. சட்டப்பிரிவு 370ல் கைவைத்தால் அவ்வளவுதான்.. இந்தியாவிற்கு பாக். எச்சரிக்கை!
முஸ்தபா கைது
கையிலும் போதிய பணம் இல்லாமல் வறுமையில் தவித்த முஸ்தபா நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்து கூலி வேலை செய்துள்ளார். செலவுக்கு பணம் போதிய அளவு இல்லாததால் பணத்திற்காக சிறு, சிறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கையில் அரிவாளுடன் இருந்த முகமது அல் முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர்.
வறுமையால் தவிப்பு
வெளிநாட்டு இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் கவனத்திற்கு மெரினா போலீசார் கொண்டு சென்றனர். இதையடுத்து சூடான் நாட்டு இளைஞர் முஸ்தாவிடம் கமிஷனர் பேசினார். அப்போது அவர் வறுமை காரணமாக சொந்த நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும், தான் நாடு திரும்ப உதவும்படியும் கமிஷனரிடம் கேட்டுள்ளார்.
சூடான் திருப்ப ஏற்பாடு
இதையடுத்து, கமிஷனரின் ஆலோசனைபடி, சூடான் வாலிபர் நாடு திரும்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மெரினா இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் இந்த பணியினை செய்தனர். போலீஸ் வழக்கு, விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் இருந்த நடைமுறை சிக்கல்களை போலீசார் களைந்தனர்,
சூடான் சென்ற முஸ்தா
தனிநபர் ஒருவர் உதவியுடன் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள விமான டிக்கெட் எடுத்து கொடுத்து முஸ்தபாவை நேற்று மதியம் பத்திரமாக சொந்த நாட்டிற்கு சென்னை போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தபடி சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.