Exclusive: ராகுல் பிரதமராவதில் ப.சிதம்பரத்திற்கு விருப்பமே இல்லை.. சுதர்சன நாச்சியப்பன் பேட்டி
Recommended Video
சென்னை: ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு வருவதில் ப.சிதம்பரத்திற்கு விருப்பம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு சிவகங்கையில் போட்டியிட்டவரான சுதர்சன நாச்சியப்பன் கார்த்தி சிதம்பரம் தேர்வை விமர்சித்துள்ளார்.
இதையடுத்து ஒன்இந்தியா தமிழ் சார்பாக அவரை அணுகி கருத்து கேட்டோம். விரிவாகவே குமுறி விட்டார் சுதர்சன நாச்சியப்பன்.
நமக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
கேள்வி: சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
பதில்: ப.சிதம்பரம் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் சிவகங்கை தொகுதி மக்கள் வெறுப்பில் உள்ளனர். குடும்பமே பெயிலில் உள்ள நிலையில், சிதம்பரம் தனது மகனுக்காக சீட் வாங்கியதை ஒரு விபத்தாக தான் பார்க்கிறேன். தொகுதிக்கு எதையும் ப.சிதம்பரம் செய்யாததால் கிட்டதட்ட இரண்டரை லட்சம் பேர் பிழைப்பு தேடி வெளியூர் சென்றுவிட்டனர். 1999-ல் ப.சிதம்பரத்தை நான் தோற்கடித்ததால் என்னை குறிவைத்து செயல்படவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர் சிதம்பரம். எனது ராஜ்யசபா எம்.பி.நிதியில் இருந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முயன்றாலும் தடுத்து நிறுத்தியவர் தான் சிதம்பரம். ப.சி.யை பொறுத்தவரை அவர் மக்கள் விரோத சக்தி.
கேள்வி: கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் அளித்த விவகாரத்தில், கட்சித் தலைமை எடுத்த முடிவை தவறு எனக் கூறுகிறீர்களா?
பதில்: தலைமையை குறை கூறவில்லை. கார்த்தி சிதம்பரத்துக்கு என்ன காரணத்திற்காக சீட் தந்தார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் கட்சியை அழிபதற்கான நடவடிக்கைகளில் ப.சிதம்பரம் ஈடுபட்டு வருகிறார் என்பது மட்டும் உண்மை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், ராகுல் பிரதமராக வரக் கூடாது என்பதே சிதம்பரத்தின் விருப்பம்.
கேள்வி: சிதம்பரம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறீர்கள்..அதற்கு ஆதாரம் என்ன?
பதில்: கடந்த 2 ஆண்டுகளாகவே ராகுலுக்கு எதிராக சிதம்பரத்தின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் ராகுல் ஒரு கருத்து கூறினால் சிதம்பரம் ஒரு கருத்து கூறுவார். கூட்டணி விவகாரத்தில் ராகுல் எடுக்கும் முடிவுக்கு மாறாக சிதம்பரம் எடுப்பார். இப்படி கூறிக்கொண்டே போனால் பலவற்றை சொல்ல முடியும். சிதம்பரத்தின் விருப்பமே காங்கிரஸ் பெரும்பான்மையாக ஜெயிக்கக்கூடாது, அப்படி ஜெயித்தால் நம்மை கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதே. அதனால், கூட்டணிக்கட்சியினர் ஆதரவில் பிரதமராக சிதம்பரம் விரும்புகிறார்.
கேள்வி: கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் அளித்ததன் மூலம் காங்கிரஸின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்கிற ரீதியில், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளீர்கள்? அது எப்படி?
பதில்: கார்த்தி சிதம்பரம் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இப்படிபட்டவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது என விமர்சனங்கள் வரும். அது காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதையெல்லாம் தாண்டி வெற்றிபெற வேண்டிய சூழல். எனவே நான் அந்த அர்த்தத்தில் கூறினேன்.
EXCLUSIVE: சார்.. தயவு செய்து நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க சார்.. அதிர வைக்கும் பெரியவர்!
கேள்வி: சிவகங்கை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? காங்கிரஸ் கட்சிக்கா? பாஜகவுக்கா?
பதில்: சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை எக்காரணத்தை கொண்டும் பாஜகவால் ஜெயிக்க முடியாது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பை சிதம்பரம் இழக்கச் செய்வாரோ என்ற அச்சமும் உள்ளது.