பாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க அவகாசம்..?
சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த பாமக நிர்வாக குழு கூட்டம் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் ஒத்திவைப்பின் பின்னணியில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கும் விவகாரமும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தை கையில் எடுத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி அது குறித்த கோரிக்கையை அதிமுக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அரசுத் தரப்பில் இருந்து இன்னும் எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை.
இதனிடையே இரண்டு முறை அமைச்சர்கள் தைலாபுரம் தோட்டத்துக்கே நேரில் சென்று சந்தித்தும் ராமதாஸ் இந்த விவகாரத்தில் இறங்கி வரவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில் நாளை நடைபெற இருந்த பாமக நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அந்தக் கூட்டத்தை ஒரு வாரம் கழித்து அதாவது ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது பாமக தலைமை. வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கும் வகையில் ராமதாஸின் இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
இதனிடையே ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் பாமக நிர்வாக குழு கூட்டத்தில் அரசியல் ரீதியாக முக்கிய முடிவெடுக்கக் கூடும் எனத் தெரிகிறது. கூட்டணி விவகாரத்தை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா அல்லது தனித்து களம் காணுமா என அரசியல் களத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.