தேமுதிகவின் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெறுவாரா விஜயகாந்த் மச்சான் சுதீஷ்?
சென்னை: தேமுதிகவின் முதல் எம்பி என்ற பெருமையை விஜயகாந்த் மச்சான் சுதீஷ் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை தொடர்ந்து மக்கள் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு புதிய கட்சியாக தேமுதிகவை கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கினார் விஜயகாந்த்.
இதையடுத்து தனியொருவனாக கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தேமுதிகவின் முதல் எம்எல்ஏவாக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.
ரிபப்ளிக் ஜன்கி பாத் எக்ஸிட் போல்.. மேற்கு வங்கத்தில் டஃப் கொடுக்கும் பாஜக.. பரிதாப காங்.
விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர்
இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த் திமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளினார். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. இதையடுத்து ஆளும் கூட்டணியில் இருந்தவாறே விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
தேமுதிக சரிந்தது
இதையடுத்து தேமுதிகவின் வளர்ச்சி சரிந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த் ஒரு இடங்களிலும் வெற்றி பெறவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக பெரும் தோல்வியை சந்தித்தது.
4 தொகுதிகள்
இந்த நிலையில் 2019 மக்களவை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என தேமுதிக முடிவு எடுத்துவிட்டது. அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் ஒன்றில் பிரேமலதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தேமுதிக
ஆனால் அவர் போட்டியிடவில்லை. மாறாக கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிட்டார். கள்ளக்குறிச்சியில் தேமுதிக செல்வாக்கு இருப்பதாலும் பாமக இவர்களது கூட்டணி கட்சியாக இருப்பதாலும் சுதீஷ் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சுதீஷ் வெற்றி
இந்த நிலையில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் தேமுதிகவில் முதல் எம்எல்ஏவாக விஜயகாந்த் ஆனது போல் அக்கட்சிக்கு முதல் எம்பியாக சுதீஷ் இருப்பார் என தெரிகிறது.