அக்டோபரில் விடுதலையாகிறார் சுதாகரன்...? நிம்மதி பெருமூச்சு விடும் மன்னார்குடி உறவுகள்..!
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுதாகரன் அடுத்த மாதம் இறுதியில் விடுதலையாவார் எனத் தெரிகிறது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி சசிகலாவும், இளவரசியும் தங்களது தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
அவர்களுடன் சிறை தண்டனை அனுபவித்த சுதாகரனுக்கு தண்டனைக் காலத்துடன் சேர்த்து ரூ.10 கோடியே ரூ.10,000 அபராத தொகையாக விதிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை சுதாகரனால் செலுத்த முடியாத காரணத்தால், கடந்த பிப்ரவரி மாதம் அவரால் விடுதலையாக முடியவில்லை.
இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதலாக ஓராண்டு தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார். இதனிடையே சிறப்பு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்ற போது ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் போட்டிருந்தது. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் மற்றொரு வழக்கு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் சுதாகரன் இருந்தது தெரிவிக்கப்பட்டது.
சுதாகரன் தரப்பில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், பாளையங்கோட்டை சிறையில் சுதாகரன் அனுபவித்த தண்டனை காலத்தின் விவரத்தை தாக்கல் செய்ததோடு கூடுதலாக இப்போது அனுபவித்து வரும் ஓராண்டு தண்டனைக் காலத்தை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுதாகரன் அனுபவித்து வரும் கூடுதலான ஓராண்டு தண்டனைக் காலத்தில் 89 நாட்களை குறைத்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் இறுதியில் அவர் சுதந்திர பறவையாக சிறையிலிருந்து விடுதலையாகவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படவுள்ளது.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றதன் விளைவாக தான் 96-ல் ஆட்சியையே பறிகொடுத்தது அதிமுக. இதனிடையே அக்காள் மகனான சுதாகரனை சிறையிலிருந்து மீட்க முடியவில்லையே என்ற வருத்தம் சசிகலாவுக்கு இருக்கச் செய்தது.
ரூ.10 கோடியை சுதாகரனுக்காக அபராதம் செலுத்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரப்பில் யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாக சுதாகரன் விடுதலையாகிறார் என்ற செய்தி மன்னார்குடி உறவுகளை குறிப்பாக சசிகலாவை நிம்மதி அடைய வைத்துள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடன் பிறந்த சகோதரர் சுதாகரன் என்பது கவனிக்கத்தக்கது.