'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்?
சென்னை: "சுதாகரனுக்கு இன்னும் தண்டனை காலம் முடியவில்லை, அவர் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார்" என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் இருந்து வெளியாகி, சென்னை தியாகராய நகர் இல்லத்தில் வசித்துவரும் சசிகலாவை அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் சந்தித்து வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்தனர்.
இதையடுத்து நேற்று பிரபுவும் சசிகலாவை சந்தித்தார். குடும்ப உறுப்பினர் எனும் முனையில் அவர் சசிகலாவை சந்தித்துள்ளார்.
சசிகலாவை சந்தித்த பிரபுவிடம் சுதாகரன் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் "சுதாகரனுக்கு இன்னும் தண்டனை காலம் முடியவில்லை, அவர் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார்" என்று கூறியுள்ளார்
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள் வழிப் பேத்தி சத்தியலட்சுமியின் கணவர் தான் தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் சுதாகரன்.
திமுக பொதுக்குழு, மாநில மாநாடு ஒத்திவைப்பு.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு
இவர், சசிகலாவின் மூத்த சகோதரி மகன் ஆவார். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் இவர் தான். இவருக்கும் சத்தியலட்சுமிக்கும் கடந்த 1995ம் ஆண்டு அப்போதே பல கோடிகள் செலவு செய்து ஜெயலலிதா திருமணம் செய்து வைத்தார். ஆனால், அதன் பிறகு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்க, மூன்றாவது குற்றவாளியாக சுதாகரனும் சேர்க்கப்பட்டார்.
தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரனின் தண்டனை முடிந்தும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த முடியாததால் அவர் சிறையிலேயே தனிமையில் தவிக்கிறார்.
சசிகலாவும், இளவரசியும் கடந்த நவம்பரில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தினர். இதையடுத்து சசிகலா ஜனவரி 27-ம் தேதியும், இளவரசி பிப்ரவரி 5-ம் தேதியும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சுதாகரனை குடும்ப உறுப்பினர்கள் கைவிட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய பிரபு, "குடும்ப உறுப்பினர் என்ற முறையில் சசிகலாவை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன். அவர் நலமுடன் இருக்கிறார்'. என்றார்.
பிரபுவின் அண்ணனும் சிவாஜி கணேசனின் மூத்த மகனுமான ராம்குமார் பா.ஜனதாவில் இணைந்தது பற்றிய கேள்விக்கு "அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், நான் அரசியலில் இல்லை" என்று பதில் அளித்தார்.