ஏழுமலையானிடம் இருப்பது கறுப்புப் பணம்... சுகிசிவம் பேச்சால் கொதித்த போன ஹெச்.ராஜா.. கடும் தாக்கு
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கறுப்பு பணம் வைத்திருப்பதாக பேசிய பிரபல ஆன்மீக பேச்சாளர் சுகி சிவத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் திருச்சியைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளர் ஆவார். பிரபல எழுத்தாளராளாக அறியப்படும் இவர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் சுகி சிவம் பேசுகையில், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.4000 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் உள்ளது. அந்த பணத்தை வைத்து ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யலாம். மேலும் இந்து கடவுள்களின் பெயரில் மருத்துவமனைகள் திறந்து ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்தால் இந்துக்களுக்கு தங்கள் மதத்தின் மீது இன்னும் அதிக பற்றுதல் ஏற்படும் என்றார்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானிடம் கருப்பு பணம் இருப்பதாக பேசிய சுகி சிவத்திற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஏழுமலையானுக்கு பக்தர்கள் இடும் காணிக்கையை ஏழுமலையான் 4000 கோடி கறுப்புப் பணம் வைத்துள்ளதாக சுகி சிவம் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் ஏன் தசமபாகம் பற்றி பேசுவதில்லை. இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.