கலகலப்பு, கெத்து, ஆர்ப்பாட்டம், அடாவடி.. கடைசிவரை சலசலப்போடு வாழ்ந்து மறைந்த சூலூர் கனகராஜ்
மறைந்த சூலூர் எம்எல்ஏ கனகராஜ் சர்ச்சை நிறைந்த பேட்டிகளை அளித்தவர்.
Recommended Video
சென்னை: "பாத்ரூம்ல தண்ணி வரல" என்பது முதல் "நானும் வெள்ளாள கவுண்டந்தான்" என்பது வரை எத்தனையோ சர்ச்சைகள்! கலகலப்பு, கெத்து, ஆர்ப்பாட்டம், அடாவடி.. என கொஞ்சமும் புகழ் மங்காமல் கடைசிவரை இருந்து மறைந்து போனார் சூலூர் எம்எல்ஏ கனகராஜ்!
சில அமைச்சர்கள் எப்படி சர்ச்சையாகவும் பரபரப்பாகவும் பேசி எக்குத்தப்பாக மாட்டி கொள்வார்களோ அதேபோல எம்எல்ஏக்களில் ஏடாகூடமாக பேசி மாட்டிக் கொள்பவர்களில் முதன்மையானவர் சூலூர் எம்எல்ஏ கனகராஜ். அதற்கு சில சாம்பிள்கள்தான் இவை:
வேடிக்கையா பார்ப்பாங்க?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தபோது இவரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு கனகராஜ் சொன்ன பதில் என்ன தெரியுமா? "போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே, அவர்களுக்கும் குடும்பம், குட்டின்னு இருக்காதா? ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக சேர்ந்து ஒரு கலெக்டர் ஆபீஸை சூறையாட வந்தால், போலீஸ்காரங்க என்ன வேடிக்கையா பார்த்துட்டு இருப்பாங்க?
தமிழக எம்பிக்களின் செயல்பாடுகள் மோசம்.. கருத்துக் கணிப்பில் தகவல்
காப்பாத்திட்டாங்க
10 பேரை சுட்டது சரிதாங்க.. ஏன்னு கேளுங்க.. இந்த 10 பேரை சுட்டு கொல்லலைன்னு வெச்சுக்குங்க.. தூத்துக்குடியே இன்னைக்கு இருந்திருக்காது, போலீசார் ஜனங்கள சுட்டதை குறை சொல்லாதீங்க. இன்னொன்னு சொல்லட்டுமா... இந்த 10 பேரை சுட்டு தூத்துக்குடி என்ற ஒரு மாவட்டத்தையே போலீஸ்காரங்க காப்பாத்தி இருக்காங்க தெரியுமா?" என்றார்.
வெள்ளாள கவுண்டந்தான்
இதற்கு அடுத்து முதல்வர் பழனிசாமியை கருணாஸ் அநாகரீகமாக பேசிய சம்பவம் நடந்தது. அப்போது முதல்வரை பேசியது தொடர்பாக பலரும் கருணாசுக்கு எதிர்ப்பு, கண்டனங்களை சொன்னார்கள். ஆனால் கனகராஜ் மட்டும் வித்தியாசமான எதிர்ப்பை தெரிவித்தார். "முதல்வர் பழனிச்சாமி எப்படி தெரியுமா... ஏசுநாதர் போல.. எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக் கொள்வார். ஆனா நான் அப்படி இல்லை. நானும் வெள்ளாள கவுண்டந்தான்... தில் இருந்தால் அந்த கருணாஸ் என்னை தொட்டுப் பார்க்கட்டும்" என்று சவால் விட்டார்.
ஏன் தெரியுமா?
இப்படிதான் தேமுதிக கூட்டணி இழுபறி சமயத்தில், "தேமுதிக வீழ்ந்து போனதுக்கு என்ன காரணம் தெரியுமா? அன்னைக்கு ஜெயலலிதாவை எதிர்த்துகொண்டு விஜயகாந்த் நாக்கை துருத்திகொண்டு வந்தாரே... அதுதான் காரணம்" என்றார்.
பாத்ரூம்
ஒருமுறை கனகராஜ் சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் பி-பிளாக்கில் (3பி) தங்கி இருந்தார். அப்போது திடீரென அவரது பாத்ரூமில் தண்ணி வராமல் போய்விட்டது. உடனே கத்தி கூப்பாடு போட்டு, சம்பந்தப்பட்ட ஆட்களை வர சொல்கிறார். எம்எல்ஏ ரூமுக்கு பிளம்பர், லிப்ட் மேன், மெட்ரோ வாட்டர் ஏஇ என எல்லோரும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வந்துவிட்டனர். அவங்களை பார்த்ததும் "யோவ்.. தண்ணி வராமல் எப்படியா பாத்ரூம் போறது" என்று தகராறு செய்தார். வந்தவர்கள் எல்லோரும் பாத்ரூமுக்குள் நுழைந்து பிரச்சனையை சரி செய்து கொண்டிருந்தார்கள்.
அசால்ட் காட்டினார்
உடனே கனகராஜ், அவர்கள் எல்லாரையும் பாத்ரூமுக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டாராம். பிறகு விஷயம் தெரிந்து அங்கிருந்தவர்கள் கதவை திறந்து அனைவரையும் மீட்டுள்ளனர். அப்போது கனகராஜ் சுயநினைவில் இல்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. இவ்வளவு அமர்க்களங்களையும் அசால்ட்டாக செய்தவர்தான் சூலூர் கனகராஜ்! ஆனால் அதிமுகவும்-அமமுகவும் இணைய வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார். அதுதான் கடைசிவரை நடக்காமலேயே போய்விட்டது!